உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
49. காரி நாயனார் புராணம் |
தொகை |
| “ ‘கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்குங்’ காரிக்கு மடியேன் -” | |
- திருத்தொண்டத் தொகை - 8 |
வகை |
| “ புல்லன வாகா வகையுல கத்துப் புணர்ந்தனவுஞ் சொல்லின வுந்நய மாக்கிச் சுடர்ப்பொற் குவடுதனி வில்லனை வாழ்த்தி விளங்குங் கயிலைபுக் கானென்பராற் கல்லின மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - 59 |
விரி |
4064. | மறையாளர் திருக்கடவூர் வந்துதித்து வண்டமிழின் றுறையான பயன்றெரிந்து சொல்விளங்கிப் பொருண் மறையக் குறையாத தமிழ்க்கோவை தம்பெயராற் குலவும்வகை முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பாற்பயில்வார்; 1 |
4065. | அங்கவர்தா மகிழும்வகை யடுத்தவுரை நயமாக்கிக் கொங்கலர்தார் மன்னவர்பாற் பெற்றநிதிக் குவைகொண்டு வெங்கணரா வொடுகிடந்து விளங்குமிளம் பிறைச்சென்னிச் சங்கரனா ரினிதமருந் தானங்கள் பலசமைத்தார். 2 |
புராணம்: இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், ஒன்பதாவது கறைக் கண்டன் சருக்கத்திற் போற்றப்பட்ட ஐந்து நாயன்மார்களுள், இரண்டாவது காரிநாயனார் புராணங் கூறத்தொடங்குகிறார்; காரியார் என்ற பெயருடைய நாயனாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி. |
தொகை: முன் புராணத்தில் உரைக்கப்பட்டது. |
வகை: கல்லின...காரியையே - கல்லாலமைந்த மதில்சூழ்ந்த திருக்கட வூரில் அவதரித்த காரியார் என்பவரையே; புல்லன ஆகாவகை - தமது நூல்கள் உலகத்தில் புன்மையனவாகிக் கழியாதபடி; உலகத்து....நயமாக்கி - உலகத்தில் பொருந்தும் பொருளும் சொல்லும் நயப்புடையனவாகச் செய்து; சுடர்....வாழ்த்தி ஒளிபொருந்திய பொன்மலையாகிய ஒப்பற்ற வில்லினை உடைய இறைவரைத் துதித்து; கயிலை....என்பர் - கயிலையினை அடைந்தார் என்று சொல்லுவர். (ஆல் - அசை) |