பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்376

     சரிதச்சுருக்கம்: காரி நாயனார் புராணம் ;- திருக்கடவூரில் அவதரித்தவர்
காரிநாயனார். அவர் வண் தமிழின் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப்
பொருள் மறையத் தமது பெயராற் காரிக்கோவை என்ற நூலினை இயற்றித் தமிழ்
மூவேந்தர்களிடமும் சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கள் மகிழும்படி
உரைநயமாக்கினார்.
 

     அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள்
சமைத்தனர்; எல்லாருக்கும் மனமகிழும் இன்பமொழிப் பயனை இயம்பினர்;
சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிக அளித்தனர்; இறைவரது திருக்கயிலை
மலையினை என்றும் மறவாதிருந்தனர்; தமது புகழ் எங்கும் பரவ விளங்கி இடையறாத
அன்பினாலே சிவனருள் பெற்று வடகயிலை மலையினைச் சேர்ந்தனர்.
 

     கற்பனை: (1) இனிய தமிழ்த் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கப்
பொருள் மறையக் கோவைபாடுதல் அரிய வண்டமிழ்த் திறமாம்.
 
     (2) அரசரும் மதிக்கப் பயில்வது பெருங் கல்வி வளத்தாலாவது.
 
     (3) அரசர்பாற் றம் கல்வித் திறத்தாற் பெற்ற செல்வங்களைச் சிவனுக்கும்
சிவனடியார்க்கும் ஆக்குவது பேரன்பின்றிறமாம்
 
     (4) இன்பமொழி கூறுதல் யாவர்க்கும் மனமகிழ்ச்சி தருவதொன்று; இன்ப மொழிப்
பயனாவது சிவனைச் குறித்துக் கூறுதலேயாம்
 
     (5) இறைவரது திருக்கயிலைமலையினை மறவாத கருத்துடையரா யிருத்தல்
செய்தற்கு அரியசெயல்; மனத்தினைக் கயிலையில் சேரவைத்ததுபோல உடம்பும்
அங்குச் சேர்தல் பேரன்பின்றிறத்தாலாவது. அயரா அன்பு சிவப்பேற்றைத் தருவது.
 
     தலவிசேடம்: திருக்கடவூர் ;- III பக்கம். 417 பார்க்க.
 

காரி நாயனார் புராணம் முற்றும்