ஏற்ற திருத்தொண்டெல்லாம் - விளக்கி - சிவனுக் குகந்தனவாக விதிக்கப்பட்ட திருத்தொண்டின் வகைகளை எல்லாம் விளக்கி; விளக்குதல் - செய்தும் செய்வித்தும் உலகறியப் பண்ணுதல். |
அருள் பெருக - சிவபிரானருள் பெருக உளதாகும்படி; |
இளவளவெண் - தொண்டரொல்லாம் - என்பனவும் பாடங்கள். 8 |
4077. | திரைசெய்கட லுலகின்கட் டிருநீற்றி னெறிவிளங்க உரைசெய்பெரும் புகழ்விளக்கி யோங்குநெடு மாறனார் அரசுரிமை நெடுங்கால மளித்திறைவ ரருளாலே பரசுபெருங் சிவலோகத் தின்புற்றுப் பணிந்திருந்தார். 9 |
(இ-ள்) திரைசெய்........நெடுமாறனார் - அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகில் திருநீற்று நெறியாகிய சிவநெறி விளக்கமடையும்படி எடுத்துச் சொல்லப்படும் பெரிய புகழினை விளங்கவைத்ததனால் மேன்மை பொருந்திய நின்றசீர் நெடுமாற நாயனார்; அரசுரிமை.......அளித்து - நீண்டகாலம் அரசாட்சி செய்திருந்து; இறைவரருளாலே...பணிந்திருந்தார் - சிவபெருமானது திருவருளாலே எல்லாராலும் பரவப்படுகின்ற பெரிய சிவலோகத்தினை அடைந்து இன்பம் பொருந்திப் பணிந்தமர்ந்திருந்தனர். |
(வி-ரை) திருநீற்றின் நெறி - சிவநெறி; விளங்க....விளக்கி - முன்னர்ப் “பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழி”ந்த நிலையும் (1916), “இருவர்தம் பாங்கு மன்றிச் சைவமங் கெய்தா தாக” (2501) என்ற நிலையும், நீங்கித் திருநீறு எங்கும் விளங்கிற்று என்று சொல்லப்பெறும் பெரும்புகழினை விளக்கி; |
ஓங்கும் - அதனால் ஓங்கிய; ஓங்கும் - “வேந்தனு மோங்குக” என்ற திருப்பா கரத்தினாலே கூனிமிர்ந்தோங்கிய (2746) என்ற குறிப்புமாம். |
நெடுங்காலம் அரசுரிமை அளித்து - நீண்ட நாள் அரசாட்சி செலுத்தி; சிவ லோகத்து....இருந்தார் - பணிதலால் இன்ப முற்று நிலை பெற்றிருந்தனர்; இன்பம் - சிவானந் தானுபத்திற் றிளைத்தல்; பணிந்து - முத்த நிலையிலும் ஆண்டானடிமைத் திறமே உள்ளது; “உயிர்தானும் சிவானுபவ மொன்றினுக்கே யுரிந்து” (சித்தி) 9 |
4078. | பொன்மதில்சூழ் புகலிகா வலரடிக்கீழ்ப் புனிதராந் தென்மதுரை மாறனார் செங்கமலத் கழல்வணங்கிப் பன்மணிக டிரையோதம் பரப்புநெடுங் கடற்படப்பைத் “தொன்மயிலை வாயிலார்” திருத்தொண்டி னிலைதொழுவாம். 10 |
(இ-ள்) பொன்.....வணங்கி - பொன் பூண்ட மதில்சூழ்ந்த சீகாழிக் கதிபாராகி ஆளுடைய பிள்ளையாரது திருவடிச் சார்பினாலே புனிதராகிய தென்மதுரையில் அரசாண்ட நெடுமாறனாரது செந்தாமரை மலர்போன்ற பாதங்களை வணங்கி, (அத்துணைகொண்டு); பன்மணிகள்...தொழுவாம் - பல மணிகளையும் அலைகளாலே நீர்விளிம்பிற் பரப்புகின்ற நீண்ட கடற்கரையில் உள்ள தொன்மையாகிய மயிலாபுரியில் வாழ்ந்த வாயிலார் நாயனாரது திருத்தொண்டின் தன்மையைத் தொழுது துதித்துச் சொல்வோம். |
(வி-ரை) இச்சரித முடிப்பும், மேல்வருஞ் சரிதந் தோற்றுவாயுமாகிய கவிக் கூற்று. |