பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்386


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

51. வாயிலார் நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை(8)
 

வகை
 

மாறா வருளரன் றன்னை மனவா லயத்திருத்தி
ஆறா வருளா லணிவிளக் கேற்றி யகமலராம்
வீறா மலரளித் தன்பெனு மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா னென்று விளம்புவாரே.

- திருத்தொண்டர் திருவந்தாதி (61)
 

விரி
 

4079. சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை
மல்ல னீடிய வாய்மை வளம்பதி
பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்
செல்வ மல்கு திருமயி லாபுரி.                                   1
 
     புராணம் :- முன் கூறியாங்குக் கொள்க.
 
     தொகை:- கடற்றுறையிலே அலைகளால் அடித்துக் கொண்டுவரப்பட்ட
செம்பவளங்கள் இருளினைப் போக்கும் ஒளி வீசுதற்கிடமாகிய தொண்மை மிக்க
திருமயிலாபுரியில் வந்த வாயிலார் நாயனாரது அடியவர்க்கும் நான் அடியேனாவேன்.
 
     துறை - கடற்கரை; செம்பவளம் - அலைகளால் அடித்துக்கொண்டு வரப்பட்ட
பவளம்; இங்குப் பவளம் என்றது பவளத்தைக் கொடிபோலக் கட்டிவாழும் அவ்வகை
ஒளியுள்ள சிறு பூச்சிகளை; இவை அலைகளின் முகத்தால் அடித்துவரப்பட்டு இரவிலும்
ஒளி செய்வன; அலைவிளிம்புகள் இரவினும் சுடர்விட்டுக் காணப்படுதல் இவ்வகைப்
பூச்சிகளின் ஒளியாலாவது என்பர்; பவளம் என்றதனால் இனம் பற்றி முத்து
முதலியனவுங் கொள்க. இதனை ஆசிரியர் “பன்மணிக டிரையோதம் பரப்பும்” (4078)
என்று முன் கூறிப் பொருள் விரித்தருளினர்.