தொன்மயிலை - இதன் தொன்மையாகிய பெருமை ஆளுடைய பிள்ளையாரது திருப் பதிகத்தாலும், அதனால் உலகறிய வெளிப்பட்ட அற்புதத்தாலும் விளங்கும். |
வகை :- மாறா....இருத்தி - மாறாத அருளினையுடைய சிவனை மனமாகிய கோயிலின்கண்ணே தாபித்து; ஆறா.....ஏற்றி - தணியாத அருளினாலே அணிவிளக்கினை ஏற்றி; அகமலராம்.....அளித்து - அகப்பூசையில் விதித்த கொல்லாமை பொறை முதலாகிய மேம்பாடுடைய எண்மலர்களையும் சாத்தி; அன்பென்னும்...கொடுத்தான் -அன்பு என்னும் சத்தாகிய அமுதத்தினை நிவேதித்தவர்; வீறார்...விளம்புவரே - பெருமை பொருந்திய திருமயிலாபுரியில் வந்தவரித்த வாயிலார் என்று சொல்வர் (பெரியோர்). |
மயிலையுள் - இருத்தி - ஏற்றி - அளித்துக் - கொடுத்தவரை - வாயிலார் - என்று விளம்புவர்; விளம்புவர் என்றதற்கெழுவாய் பெரியோர் என்பது அவாய் நிலையால் வந்தது; இந்நாயனார் சிவயோகத்தமர்ந்து இடையறாது அகப்பூசை செய்து பேறடைந்தவர் என்பதாம். வகைநூ லாதரவே பெரிதும் கொண்டு ஆசிரியர் இந்நாயனார் புராண வரலாறும் பண்புங் கூறியருளினர்; (4086) பார்க்க, மனக்கோயில் மனத்தைக் கோயிலாக்கி; “மறவாமை யானமைத்த மனக்கோயில்”; அணிவிளக்கு - “உணரும் ஒளிவிளக்கு”; வீறாமலர் - புறப்பூசைக்கு விதித்த அலரி - நந்தி வட்டம் முதலிய எண்வகை மலர்களினும் சிறந்தவை யாதலின் வீறாம் என்றார்; வீறார்மயிலை - செல்வம் - குடி முதலியவற்றின் சிறப்பு; தொகை நூலும் விரிநூலும் பார்க்க. |
ஊரும் பெயரும் தொகை நூல் தொகுத்துரைத்தது. அவற்றுடன் அடிமைத் திறமும் பண்பும் வகை நூல் வகுத்தது. |
விரி :- 4079. (இ-ள்) சொல்....பதி - நூல்களில் எடுத்துச் சொல்லும் புகழ்ச் சொற்கள் விளங்கும் சிறப்புடைய தொண்டை நன்னாட்டிலே வளப்பம் மிகுந்த, வாய்மையினாற் சிறந்த வளத்தையுடைய பதியாகும்; பல்..திரு மயிலாபுரி - பல பெருங்குடிகளும் நீடுகின்ற வழிவழி தொடர்ந்து வரும் செல்வம் நிறைந்த திருமயிலாபுரியாகும். |
(வி-ரை) சொல் விளங்குசீர் - இது பற்றி முன்னர்த் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தும், பிறாண்டு முரைத்தவை பார்க்க. சொல் - நூல்; சொல் - புகழ் என்றலுமாம். |
மல்லல்.....வாய்மைவளம் - மல்லல் - செல்வச் செழிப்பு; வாய்மைவளம் - ஒழுக்கமேம்பாடு; பெருங்குடி நீடுதல் - பல பெருங்குடி மக்கள் பலவகையினரும் பெருகுதல்; இது நகரச் சிறப்பு. |
பரம்பரை - என்பதனைக் குடி என்பதனுடனும், செல்வம் என்பதனுடனும் சேர்த்துரைக்க; இடையில் வைத்தது கவிநயம்; பரம்பரை - வழிவழி வரும் தொடர்பு; வழிவழி வரும் செல்வம் அமைதியுடன் சிறந்து நல்வழிப் படுதலும், புதிதின் வருதல், பெரும்பான்மை, அவ்வாறின்றிப் பற்பல கேடுகளுக்குக் காரணமாதலும் உலகியலில் காணப்படும் உண்மையாதல் குறித்தது. 1 |
4080. | நீடு வேலைதன் பானிதி வைத்திடத் தேடு மப்பெருஞ் சேமவைப் பாமென ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி மாடு தள்ளு மரக்கலச் செப்பினால். 2 |