4085. (இ-ள்) வாயிலாரென....தோன்றியே - வாயிலார் என்னும் பழைமையாகிய பெருங்குடியில் தூய்மையாகிய பெருமரபில் முதல்வராய் அவதரித்து; நாயனார்...விளங்குவார் - தலைவராகிய சிவபெருமானது திருத்தொண்டில் அன்பு பொருந்திய பெருவிருப்பத்துடனே விளங்குவாராகி. |
7 |
4086. (இ-ள்) மறவாமை.....இருத்தி - (இறைவரை) மறவாமை யாகிய கருவியினால் அமைத்த மனமாகிய கோயிலினுள்ளே எழுந்தருளுவித்து நிலைபெறத் தாபித்து; உற ஆதிதனை....ஏற்றி - பொருந்தும்படி அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கினை ஏற்றி; இறைவாத...ஆட்டி - அழிவில்லாத பேரானந்த மாகிய நீரினால் திருமஞ்சனமாட்டி; அறவாணர்க்கு......அமைத்து - அறத்தின் வாழும் அந்நாயனாருக்கு அன்பு என்னும் திருவமுதை அமைத்து; அர்ச்சனை செய்வார் - பூசிப்பாராய்; 8 |
4087. (இ-ள்) அகமலர்ந்த அர்ச்சனையில் - அகத்துள் விளங்கிய பூசையில்; அண்ணலார்தமை...நெடுநாள் செய்து - சிவபெருமானை நாடோறும் நிகழ வருகின்ற அன்பினாலே நிறையும் வழிபாட்டினை இடையறாது விளங்கும்படி நெடுநாட்கள் செய்து; சிவபெருமான். மெய்த்தொண்டனார் - சிவபெருமானது திருவடியின் கீழே புகலாக அடைந்து புண்ணிய மெய்த் தொண்டனாராகிய வாயிலார் நாயனார் தொழுது அமர்ந்திருந்தனர். |
9 |
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4085. (வி-ரை) வாயிலாரென நீடிய மாக்குடி - வாயிலார் என்பது குறுக்கையர் - சேக்கிழார் - என்பனபோல இவரவதரித்த குடிப்பெயர். |
தூய மாமரபு - குடியினையுடைய தூய பெருமரபு. மரபு - குடியின் உட்பிரிவு; இப்பொருள் இராமநாத செட்டியார் குறிப்புரையிலும் கண்டது. சேக்கிழார் என்பது போலக் குடிப் பெயரே இயற்பெயராய் வழங்கலாயிற்றுப் போலும். வேளாளர் என்பது பெரும் பிரிவாகிய குலம். அதன் உட்பிரிவு குடி. மரபு - என்பது அதனுட்பிரிவு; “நடைமரபிற் குடிநாப்பண்....நிலைவேளாண்குலம் (1280) “குறுக்கையர் தங்குடி”. |
நாயனார் - தலைவர்; சிவபெருமானுடைய; ஆறானுருபு விரிக்க. |
காதல்விருப்பு - ஒரு பொருட்பன் மொழி; விருப்பின் மிகுதி குறித்தது. |
விளங்குவார் - செய்வார் - அமைத்துத்தொழுது இருந்தார் என்று மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க. நயப்பு - விருப்பம். 7 |
4086. (வி-ரை) இத்திருப்பாட்டு அகப்பூசை விதி விளக்கமாயமைந்த உறுதிப்பாடுடையது. அந்தரியாக பூசை என்று சிவாகமம் கூறும். “அந்தரியாகந் தன்னை ஞான பூசையா யறைவரது தானும் ஆன்மசுத்தி யாகும்” என்பது ஞான சாத்திரம். |
மறவாமையான் அமைத்த மனக்கோயில் - மறவாமை என்ற சாதனங்கொண்டு அமைத்த மனமாகிய கோயில் “மனவா லயத்திருத்தி” என்பது வகைநூல்; “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்” (திருமந்திரம்). கோயில் - கருவறை; (கருப்பக்கிருகம்); பெருங்கோயில் என்பது கருவறை (மூலத்தானம்); மற்றைத் திருச்சுற்று முதலியவை ஆலயம் எனப்படும். |
ஆதி - இறைவர்; ஆதிதனை உற உணரும் என்க; உற - பொருந்த; உறவு என்று கொண்டு அவரே உறவாவார் என்பதனை உணரும் என்றலுமாம். |