உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
52. முனையடுவார் நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “அறைக்கொண்ட வேனம்பி முனையடுவார்க் கடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை (8) |
வகை |
| “என்று விளம்புவர் நீடூ ரதிபன் முனையடுவோன் என்று மமரு ளழிந்தவர்க் காக்கூலி யேற்றெறிந்து வென்ற பெருஞ்செல்வ மெல்லாங் கனகநன் மேருவென்னுங் குன்றம் வளைத்த சிலையான் றமர்க்குக் கொடுத்தனனே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி (62) |
விரி |
4089. | மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திருநாட்டு நாறு விரைப்பூஞ் சோலைகளி னனைவாய் திறந்து பொழிசெழுந்தேன் ஆறு பெருகி வெள்ளமிடு மள்ளல் வயலின் மள்ளருழும் சேறு நறுவா சங்கமழுஞ் செல்வ நீடூர் திருநீடூர். |
புராணம் :- முன் உரைத்தாங் குரைத்துக் கொள்க. |
தொகை :- வெட்டி வீழ்க்கும் தன்மையுடைய படைகளையேந்திய சிறந்த ஆண்மகனாராகிய முனையடுவார் நாயனாருக்கு அடியேனாவேன். அறை - வெட்டுதல் முதலியனவாய் அறுதலைச் செய்யும் தன்மை; வேல் - இங்கு ஆயுதப் பொதுமையுணர்த்திற்று; நம்பி - ஆண்மக்களுட் சிறந்தவன்; முனையடுவார் - நாயனாரது தொழில் பற்றி வந்த காரணப்பெயர். இவரது இயற்பெயர் விளங்கவில்லை; இயற்பகையார் - எறிபத்தர் என்பன போல; தொழில் வரலாறும் பெயரும் தொகைநூல் பேசிற்று. |
வகை :- நீடூர் அதிபன் - திருநீடூரில் வந்தவதரித்த தலைவர்; முனையடுவோன் - முனையடுவார் நாயனாரெனக் காரணப் பெயர் பூண்டவர்; என்றும்....எறிந்து - போரில் வலிமையின்றித் தோற்றவர்களுக்காக எந்நாளும் கூலி ஏற்றுக்கொண்டு சென்று அவரது மாற்றாரை வென்று; வென்ற...கொடுத்தனனே - அவ்வாறு ஈட்டிய பெருஞ் செல்வங்களை யெல்லாம் பொன்மலையாகிய மேரு என்னும் குன்றத்தை வளைத்த வில்லாகவுடைய சிவபெருமானடியவருக்குக் கொடுத்தனன்; என்று விளம்புவர் - என்று அறிந்தோர்கள் கூறுவார்கள். (ஏ - அசை). |