பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்404


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

53. கழற்சிங்க நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“கடல்சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்”
              7
 

வகை
 

“மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை யரியப்பொற்கை
காதிவைத் தன்றோ வரிவதென் றாங்கவள் கைதடிந்தாள்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங் கோதைக் கழற்சிங்கனே”      8
 

- திருத்தொண்டர் திருவந்தாதி - 64
 

விரி
 

4096. படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
கடிமதின் மூன்றுஞ் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
அடிமல ரன்றி வேறொன் றறிவினிற் குறியா நீர்மைக்
கொடிநெடுங் தானை மன்னர் கோக்கழற் சிங்க ரென்பார்.         1
 
     புராணம்: முன் உரைத்தாங் குரைத்துக் கொள்க.
 
     தொகை: கடலாற் சூழப்பட்ட உலகத்தை யெல்லாம் அரசு புரிந்து காக்கின்ற
பேரரசராகிய காடவர் மரபில் வந்த அரசராகிய கழற்சிங்கரது அடியவர்க்கும் யான்
அடியேனாவேன்.
 
     காக்கின்ற என்று நிகழ்காலத்தில் கூறியமையால் ஆளுடைய நம்பிகள் காலத்தில்
இவ்வரசர் அரசாட்சி புரிந்தனர் என்பது கருத்தப்படும்.1
 
     காடவர்கோன் - காடவர் மரபில் வந்தவர்; “பல்லவர் குலம்” (4096); பல்லவர்
மரபும் காடவர் மரபும் ஒன்று.
 
     கழற்சிங்கன் இவர்க்கு மற்றும் பல பெயர்கள் வழங்கியன என்பர்.
 

_____________

1      குறிப்பு: இவர் மூன்றாவது நந்திவர்மன் என்ற பெயரால் கல்வெட்டு முதலிய
ஆதரவுகளிற் காணப்படும் அரசராக இருக்கலாம் என்றும், இங்கு இப்புராணத்துள்
வரும் அவரது பட்டத்து அரசி, சங்கா என்னும் சமணச் சார்புடைய பெண்மணி
என்றும் சரித ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள்.