பக்கம் எண் :

பெரியபுராணம்405

     வகை: மாதவத்தோர் தங்கள் வைப்பினுக்கு ஆரூர் மணிக்கு -
மாதவத்தோர்களது சேமநிதி போல்வாரும்; திருவாரூரில் மணிபோன்றவருமாகிய
நாயகருக்காக; வைத்த.......மூக்கை அரிய - வைக்கப்பட்ட மலரினை எடுத்து மோந்த
தமது பட்டத்தரசியினது மூக்கினை(ச் செருத்துணையன்பர்) அரிய; பொற்கை...தடிந்தான்
- மலரினைத் தொடுத்து முன் எடுத்த பிழையினை முன்னர்ச் செய்த கையினை முதலிற்
சேதித்த பின்னரன்றோ (மூக்கை) அரிவது என்று அங்கு அவளது கையினைத்
துணித்தார்; நாத.....கழற்சிங்கனே - பண்ணுடன் மொய்த்துக் கூடி வண்டுகள் திளைக்கும்
மாலையினையணிந்த கழற்சிங்கரேயாம்.
 

     மாதவத்தோர்.....வைப்பு - சிவபெருமான்; மணி - மணிபோன்றவர்; இறைவர்;
வைப்பினுக்கு - மணிக்கு என இருவகையாகக் கூறியது, பின்னர் இச் சரிதத்தினுள்
இருவகை அபராதங்களும் கழுவாய்களும் நிகழும் குறிப்பம்; வைப்பு - சேமநிதி; தேவி
- மனைவி; பட்டத்தரசி; அரிய என்பதற்குச் செருத்துணையன்பர் என்ற எழுவாய்
வருவிக்க;
     கை காதி வைத்தன்றோ அரிவது - காதுதல் - துண்டித்தல்; அரிவது -
மூக்கினைக் கருவிகொண்டு வார்தல்; காதிவைத்த பின்னரன்றோ என்பது வைப்பு
முறையாற் குறிக்கப்பட்டது. நாதம் - பண்பாடும் சத்தம்; ரீங்காரம் என்பர்; கோதை -
மாலை.
 
     மரபும் தொழிலும் பெயரும் தொகைநூல் கூறிற்று; அவற்றுடன், செய்த
திருத்தொண்டின் வரலாறும் வகைநூல் வகுத்தது.
 
     விரி: 4096. (இ-ள்) படிமிசை.....வந்தார் - உலகில் விளங்கிய பழைமையாகிய
பல்லவர்களது குலத்தில் வந்தவதரித்தவர்; கடிமதில்......நீர்மை - காவல் பொருந்திய
மதில்களையுடைய மூன்று நகரங்களையும் எரித்த, கங்கைதங்கிய நீண்ட
சடையினையுடைய இறைவரது செம்மை பொருந்திய திருவடி மலர்களையே யல்லாமல்
வேறொன்றினையும் தமது அறிவினில் பொருளாகக் குறியாத தன்மையினையுடைய;
கொடி.........என்பார் - வெற்றிக் கொடியினை ஏந்திய நெடிய சேனைகளையுடைய
அரசராகிய கோக்கழற்சிங்கர் என்னப்படுபவர்.
 
     (வி-ரை) கோக்கழற்சிங்க ரென்பார் - வந்தார் - என்று கூட்டுக. என்பார் -
எனப்படுவார்; படிமிசை......குலம் - முன் காலமுதல் உலகினில் விளங்க அரசாண்ட
பழமைக் குலம் பல்லவர் மரபாம் என்பது; பல்லவர் - சோழரது ஒரு தொடர்புடைய
பிரிவு. இவர்க்கு இடபக்கொடி உரித்து என்பர்.
 
     கடி - காவல்; கடியப்படும் என்ற குறிப்புமாம்.
 
     அடிமலரன்றி......நீர்மை - அன்றிக்குறியா என எதிர்மறையாற் கூறியது உறுதி
குறித்தற்கு. நீர்மை - பெருங்குணமமைந்த;
 
     அறிவினிற் குறியா - குறிக்கோளாக மனங் கொள்ளாத - சிந்தியாத - சிறந்த
சிவபத்தியுடைமை. அறியவேண்டிய மெய்ப்பொருளை அறிந்தாராதலின் எனக்
காரணக்குறிப்புப்பட அறிவினில் என்றார். உலகியற் பொருள்கள் பிறவும் புலப்படினும்
அவற்றை அறிவினுட் குறிக்கொளமாட்டார் என்பார் அறியா என்னாது குறியா
என்றார்.
 
     கொடி - வெற்றிக்கொடி; ஈண்டுச் சோழர்களது புலிக்கொடி; பல்லவரது இடபக்
கொடியுமாம்.
 
     கோ - பெருமன்னர் - முடிமன்னர்.                               1