பக்கம் எண் :

பெரியபுராணம்407

     4098. (வி-ரை) அரனார் கோயில்கள் பலவும் சென்று -
சிவத்தலயாத்திரையினை மேற்கொண்டனர். இது இவர் சிறந்த சிவபத்தராதலினாலும்
அரசராதலானும் மேற்கொண்ட நிலை.
 
     தவலுறுதல் - பிறழ்தல்.
 
     தக்க மெய்த்தொண்டு - தக்க - தமக்குத் தகுதியான; மெய்த்தொண்டு -
உண்மை நெறியினிற்கும் தொண்டு; மெய் - உடம்பு, உடலாலாகிய தொண்டு என்ற
குறிப்பு முடையது.
 
     சிவபுரி என்ன மன்னும் - சிவலோகம் இது என்று சொல்லும்படி; திருவாரூர்ப்
பிறந்தார்களெல்லாரும் பிறவியற முத்தியிற் செல்வார் என்றலால் சிவபுரி எனத் தகுவது.
 
     தென் - திருவாரூர் - இறைவர் எழுந்தருளிய பூங்கோயில் தென்றிருவாரூரில்
உள்ளது. தென் - பிறிதினியையு நீக்கிய விசேடணம். “தென் றிருவாரூர் புக்கு எல்லை
மிதித்தடியேன்” (நம்பி).
 
     பவம் அறுத்து ஆளவல்லார் - பிறவி வேரினை அறுத்துத், தம் அடிமையாக
வைப்பவர்; புற்றிடங் கொண்டார் - தியகேசருமாம்.
 
     பணிய - வணங்குதற் பொருட்டு. இவரது பட்டத்துத் தனித்தேவி பணிதலில்
உடன் நில்லாது கோயிலின் பெருமை கண்டுவந்தனள் என்றும், இறைவர்க்காக வைத்த
புதுப்பூவை மோந்து பின்னர்க் குற்றம் செய்தனள் என்றும், வருவது சரிதமாதலின்,
அரசர் பணியச் சென்றார் என்று, வேறாக விதந்து கூறினார்.               3
              
 
4099. அரசிய லாயத் தோடு மங்கணர் கோயி லுள்ளால்
முரசுடைத் தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்
விரைசெறி மலர்மென் கூந்த லுரிமைமெல் லியலார் தம்முள்
உரைசிறந் துயர்ந்த பட்டத் தொருதனித் தேவி மேவி,              4
 
4100.    கோயிலை வலங்கொண் டங்கட் குலவிய பெருமை யெல்லாம்
சாயன்மா மயிலே போல்வா டனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமந் தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ வங்கு விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.       5
 
     4099. (இ-ள்) அரசியல்.....போதில் - முரசுகளையுடைய சேனை மன்னர் ஐவகைக்
குழுக்கள் சூழ இறைவருடைய கோயிலினுள்ளே சென்று முதல்வராகிய புற்றிடங்
கொண்டாரை வணங்கும் பொழுது; விரைசெறி.......மேவி - மணமிக்க மலர்களை யணிந்த
மெல்லிய கூந்தலையுடைய உரிமைத் தேவியர்களுள்ளே புகழாற் சிறந்து உயர்ந்த
பட்டத்துத் தனித்தேவி வந்து;                                         4
 
     4100. (இ-ள்) கோயிலை....கண்டுவந்து - சாயலினால் மயிலே போல்வாளாகிய
அத்தேவி கோயிலை வலமாக வந்து அங்கு உள்ள பெருமைகளை யெல்லாம்
தனித்தனியே பார்த்து வந்து; தூய....பாங்கர் - தூய்மையுடைய மெல்லிய
பள்ளித்தாமங்களைத் தொடுப்பதற்குரிய மண்டபத்தின் பக்கத்திலே; மேயதோர்
.....மோந்தாள் - பொருந்தியதோர் புதியபூ அங்கு விழுந்ததொன்றினை எடுத்து
மோந்தனள்.                                                       5
 
     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.