பக்கம் எண் :

பெரியபுராணம்411

     4104. (வி-ரை) அந்நிலை...போது - தண்டம் செய்த வீரம் எத்துணை,
அத்துணை, அரசன்முன் வந்து செய்தி சொன்ன வீரம் என்க; “வீர மென்னால்
விளம்பும் தகையதோ? (144); இவ்வாறாகிய தன்மையில், எறிபத்தர், தாம், புகழ்ச்
சோழரது பட்டத்து யானையினையும் பாகரையும் படுத்து வீழ்த்திய செயலை அவர்பால்
அறிவித்து (590 - 591)ச் சொல்லிய வீரம் இங்கு நினைவுகூர்தற்பாலது.
 
     அடைவே - முறையே; வரிசையிலே. உலகியல் நிலைபற்றி அரசர்பால் எழுந்த
கோபம், அன்பினியலின்முன் உடனே தணிந்த தன்மையே நாயனாரது பெருமை.
“நாடற நெறியில் வைக” (4097), “அடிமலரன்றி.....குறியா” (4096) தண்டந் தன்னை -
தண்டத்தைச் செய்தலில்.                                                 9
 
     4105. (வி-ரை) கையாம் முற்படத் துணிப்பது - துணிக்கப்படுவது எனப்
பிறவினைப் பொருளில் வந்தது; முற்பட - முன்னே, உடைவாள் - உடையில்
செருகியுள்ளவாள்.
 
     தொட்டுமுன் எடுத்த - எடுத்தலால் எனக் காரணக் குறிப்புடன் நின்றது; கை
தொட்டு எடுத்துத்தரப் பின் மூக்கு முகர்ந்தது ஆதலின் கையே முதற் குற்றவாளியாம்;
அதனையன்றோ முன்னர்த் தண்டித்தல் தகுதி என்றபடி.
 
     பட்டமும்...குழலாள் - ஏனை யாவராயினும் இந்நிலையிலிருந்தால்
இத்தன்மைகளில் மனம்பற்றி, உற்ற செயல் செய்யாது விடுவர் என்ற குறிப்புப்படக்
கூறியது இந் நாயனாரது செயற்கருஞ் செய்கையின் மேன்மை தோன்றக் கூறியது; சிவன்
பணியின் கடமையின் முன்னர் இவ்வுலக பாசபந்தத் தன்மைகள் வலியற்றொழிந்தன
என்பதே அடிமைத்திறம்; இவ்வாறு அரசராற்றண்டிக்கப் பட்டமையின் அவ்வரசி
சிவாபராதமாகிய குற்றத்தின் நீங்கி நற்கதியடையக் காரணமாயிற்று; இக் குறிப்புப் பெறப்
“பவமறுத்தாட் கொள்வார்” (4098) என்று முன் கூறியது காண்க. உலகியலில் வன்மை
போலக் காணப்படினும் இது கருணைச் செயலே என்பதாம்; “நீடுபெரும் பாவமின்றே
நீங்குமென நாடி” (போர் - பல்); பட்டமும் - உம்மை உயர்வு சிறப்பு. மட்டு - தேன்;
அவிழ் - விரிந்தலைந்த என்ற குறிப்பு.
 
     கையே - என்பதும் பாடம்.                                         10
 
4106.    ஒருதனித் தேவி செங்கை யுடைவாளாற் றுணித்த போது
பெருகிய தொண்ட ரார்ப்பின் பிறங்கொலி புவிமேற் பொங்க
இருவிசும் படைய வோங்கு மிமையவ ரார்ப்பும் விம்மி
மிருவிய தெய்வ வாச மலர்மழை பொழிந்த தன்றே.                     11
 
     (இ-ள்) ஒருதனி...போது - தமது ஒப்பற்ற தனித் தேவியின் செங்கையினை
அரசர் உடைவாளினாற் றுண்டித்த போது; பெருகிய.......பொங்க - பெருகிய
தொண்டர்களின் அர முழக்கமாகிய விளக்கமுடைய ஒலி நிலவுலகின் மேலே பொங்க;
இருவிசும்படைய.......விம்மி - ஆகாய முழுதும் கிளம்பும் தேவர்களது முழக்கமும் கூடிப்
பெருகி; மருவிய.......அன்றே - பொருந்திய தெய்வமணமுடைய கற்பகம் பூமாரியும்
அப்பொழுதே பெய்தது.
 
     (வி-ரை) ஒரு தனித்தேவி - முன் (4099 - 4105) உரைத்தவை பார்க்க.
 
    தொண்டர் ஆர்ப்பின் பிறங்கொலி - அரகர முழக்கம். பொங்க - மிக்கோங்க.
 
     இமையவ ரார்ப்பு - தேவதுந்துபி முதலிய முழக்கு.
 
     அடைய - நிறைய; முழுதும்; ஓங்கும் - நிறைந்த; விம்மி - பெருகி; விம்முதல்
- பெருகுதல். இவை திருத்தொண்டின் விளக்கமும் அருமைப்பாடும் கண்டபோது
நிகழ்வன.
 
     தெய்வ வாசமலர் - மணமுள்ள மந்தார முதலிய தெய்வ மரங்களின் பூக்கள். 11