கற்பனை : (1) இறைவரது திருமுன்றினில் திருப்பணிகள் செய்தலும் காலந்தோறும் சேர்ந்து சிவனை வழிபடுதலும் சிறந்த சிவதருமங்களாம். |
(2) சிவன் கோயில் திருமுன்றிலில் விழுந்த புதுப்பூ சிவனுக்காவது; அதனை எடுத்து மோத்தல் சிவாபராதம். |
(3) சிவாபராதத்தினைக் கண்டபோது உரியவாறு தண்டித்தல் அன்பர்களது கடமை; இதனால் இருவரும் பயனடைகின்றனர். சிவாபராதம் கண்டு தண்டிக்காது வாளா விருத்தல் பாவம்; அவ்வாறு தண்டித்தல் இயலாவிடின் சிவசிவ என்று சொல்லி அவ்விடத்தை விட்டு நீங்குக என்பது விதி. |
(4) சிவாபராதம் உலகியலில் பெரியார் சிறியார் என்ற பாகுபாடின்றி யாவர் மாட்டுக் கண்டாலும் ஒறுக்கத்தக்கது. |
தலவிசேடம்: மருகல் நாட்டுத் தஞ்சாவூர் : திருமருகலினின்றும் தென்கிழக்கில் 4 நாழிகையளவிலும், திருச்செங்காட்டங் குடியினின்றும் தெற்கில் 2 நாழிகையளவிலும் உள்ளது. விற்குடி நிலயத்தினின்றும் வடகிழக்கில் 2 நாழிகையளவில் திருவிற்குடியை யடைந்து அங்கு நின்றும் கிழக்கில் 3 நாழிகையளவில் உள்ள திருப்பயற்றுர் வழியே அதன்மேல் 2 நாழிகையிலும் அடையலாம். எல்லாம் மட்சாலைகள். வளப்பாற்றின் வடகரையில் உள்ளது: இது கீழைத்தஞ்சாவூர் என வழங்கும்; கோயிலில் நாயனாரது திருவுருவம் உள்ளது. இந்நாயனார் திருவாரூரில் குமர கோட்டத்தில் வசித்தவர் என்பது கர்னபரம்பரை. |
55. செருத்துணை நாயனார் புராணம் முற்றும் |