பக்கம் எண் :

பெரியபுராணம்443

     தீயவினைப்பயன் துணிப்பார் - சிந்த வாள்கொடுதுணித்தார் - என்க; இவர்
துணித்தது உடலினையேயாயினும் அது கருத்தன்று; அவ்வுடலால் ஈட்டப்பட்ட தீய
வினையாகி உயிருடன் சாரும் அவ்வினையால் வரும் பாவத்தினை அவ்வாறு சாராது
துணித்தனர் என்பதாம். இவ்வாறு வினைப்பயன் துணிக்கப்பட்டமையாலே இவர்கள்
பாசமறுத்துத் தூய்மைபெற்று மேலுலகம் எய்தினர் என மேற் கூறப்படுதல் காண்க.
துணிப்பார் - துணிப்பாராகிய நாயனார்; வினையாலணையும் பெயர்.
 
     சிந்த - உடல் கூறுபட; உயிர் போம்படியாக - தந்தையார் தாயார் என்பன
சிறப்புப் பன்மைகள்; வாள்கொடு - வாளினைக் கொண்டு; கொடு - இடைக்குறை; 3ம்
வேற்றுமை யுருபு - கருவிப்பொருள்.
 
     தீவினையின் பயன் துணிப்பார் - என்பதும் பாடம்.                    9
 
4143.    பின்னங்குப் பிழைத்ததொரு பிள்ளையைத்தம் பெயரோ “னவ்
வன்னந்துய்த் திலது; குடிக் கொருபுதல்வ; னருளு” மென,
“விந்நெல்லுண் டாண்முலைப்பா லுண்ட” தென வெடுத்தெறிந்து
மின்னல்ல வடிவாளா லிருதுணியாய் விழவேற்றார்.                     10
 
     (இ-ள்) பின் அங்கு...பிள்ளையை - அதன்பின் அங்குப் பிழைத்த ஒரு
குழந்தையைச் சுட்டி; தம் பெயரோன்...... அருளும் என - தமது பெயரையுடைய
காவலாளன் “இஃது அந்தச் சோற்றினை உண்டிலது; அன்றியும் ஒரு குடிக்கு ஒரு
புதல்வனாகும்; வெட்டாது அருள்புரியவேண்டும்” என்று கூற; இந்நெல்.....உண்டது என
- அன்னமுண்டில தாயினும் இந்நெல்லுண்டவளது முலைப்பாலினை உண்டது என்று
கூறி; எடுத்தெறிந்து.....ஏற்றார் - எடுத்து மேலே வீசி எறிந்து மின்னுகின்ற நல்ல வடித்த
வாளினால் இரண்டு துண்டாகி விழும்படி ஏற்றனர். (தாங்கினார் - துணித்தனர்).
 
     (வி-ரை) நாயனாரது திட்பமான மனநிலையினைக் காட்டுவது இத்திருப்பாட்டு.
 
     பிழைத்தது - நாயனாரது கொலைவாளுக்குத் தப்பிப் பிழைத்துக் கிடந்ததாகிய;
ஒரு பிள்ளை - ஒரு குழந்தை; அஃதொன்றுதான் தப்பியது என்றும், பிள்ளை ஒரே
பிள்ளை என்றும் உரைக்க நின்றது.
 
     “அவ்வன்னம்.......அருளும்” - இஃது அக்காவலாளன் அக் குழந்தைக்காகப்
பரிந்து சொல்லிய பேச்சு; காவலாளன் பேசினன் எனவே, ஏனையோர் அனைவரும்
கொல்லப்பட்டொழிந்தனர் என்பது குறிப்பு. இக்காவலாளன் கூறிய காரணங்கள்
இரண்டு; இப்பசுங் குழவி திருவமுக்காகிய நெல்லரிசியின் சோற்றை உண்டிலது
என்பதொன்று; ஒருகுடிக்கு ஒரு குழவி என்பது மற்றொண்டு; இவற்றுள் பின்னையது
ஈண்டைக்கேலாமையின், அதனை விடுத்து முன்னையதற்கே நாயனார் விடை கூறி மேற்
செயல் செய்கின்றார். அந்த விடையாவது :- அவ்வன்னத்தைத் தான் உண்ணாவிடினும்
அதனை உண்டவளது முலைப்பாலினை உண்டு வளர்ந்தது; அம் முலைப்பால்
அவ்வன்னத்தின் சாரமாய் உள்ளது; அச்சிவாபராதம் இக் குழவியின் உயிரினையும்
பற்றும்; ஆதலின் ஏனையோரிற் போல அதனைச் சேதித்து வினையினை ஒழித்தல்
வேண்டும் என்பதாம். வினைப்பவம் துணிப்பதன்கண் வயதிற் சிறியவர் பெரியவர்
என்ற பாகுபாடின்றி எல்லா வுயிரும் ஒன்றுபோலவே பொறுப்பேற்பர் என்பது
ஞானநூன் முடிபு. வயதின் இளமை பற்றியும், எண்ணாது செய்தல் என்பது பற்றியும்,
பிறவாறும், செய்த குற்றங்களுக்குப் பொறுப்பின்மை கூறி, மன்