பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்462

தாரணை - என்ற யோகவழியால் சிவத்தினிற் சித்தத்தை நிலைபெறுத்துதல். இது
உடலில் குண்டலித்தானத்திலுள்ள குண்டலிசத்தியைப் பிரணவத்தால் எழுப்பிச்
சுழுமுனை வழியாய் மேலே செலுத்துதலாலாம்.
    

     ஐந்தின் கடவுளர்தம் பதங்கடத்தல் என்பது - (1) முதலில் நாற்கோணம் -
பொன்னிறம் - லகார அக்கரம் - உடைய பிருதுவியை (மண்) இதயத் தானத்தில்
வைத்து அதன் கடவுளாகிய பிரமதேவரைத் தியானித்தலும்; பின் அதன் மேற்சென்று
(2) இரண்டாவது இருகோணம் (தாமரை என்போருமுண்டு) - வெண்ணிறம் - வகார
அக்கரம் உடைய அப்பு (நீர்)வைக் கண்டத்தானத்தில் வைத்து அதன் கடவுளாகிய
விட்டுணுவைத் தியானித்தலும்; பின், அதன் மேற் சென்று, (3) மூன்றாவது முக்கோணம்
- செந்நிறம் - ரகார அக்கரம் - உடைய தேயு(தீ)வை உண்ணாக்கின் தானத்தில்
வைத்து அதன் கடவுளாகிய உருத்திர மூர்த்தியைத் தியானித்தலும்; பின், அதன்மேற்
சென்று (4) நான்காவது, அறுகோணம் - கருநிறம் - யகார அக்கரம் - உடைய
வாயுவைப் புருவநடுத் தானத்தில் வைத்து அதன் கடவுளாகிய மகேசமூர்த்தியைத்
தியானித்தலும், பின், அதன் மேற் சென்று, (5) (ஐந்தாவது) - வட்டம் - புகைநிறம் -
ஹகாரவக்கரம் - உடைய ஆகாயத்தை பிரமரந்திரத் தானத்தில்வைத்து அதன்
கடவுளாகிய சதாசிவமூர்த்தியைத் தியானித்தலும்; அவ்வம்மூர்த்திகளை ஆங்காங்கும்
தரிசித்தலும், அத்தியானத்தில் அசைவற்றிருந்து சென்று, முத்திக்கபாடம் திறக்க,
ஆறாவதாகிய நாதாந்தத்தில் சேறலுமாம்; இவை முறையே மூலாதார முதல்
விசுத்திவரை உள்ள ஐந்து ஆதாரத் தானங்கள் என்பர்.
 
     சிவத்தடைந்த சித்தத்தார் - நாதாந்தம் என்னும் ஆறாவது ஆதாரமாய்ப்,
பிரமரந்திரத் தானத்தின் மேற்பட்ட ஆணை என்றும் தானத்தில் சிவம் பூரணமாய் -
மெய்யாய்ப் - பரஞ்சோதியாய்ப் பொலிந்து விளங்குவர். அவரை அங்கு அவ்வாறு
தியானித்துத் தரிசித்து அசைவற்று அங்குச் சித்தத்தை நிலைபெற வைத்தவர் என்க.
“பேணு தத்துவங்க ளென்னும் பெருகுசோ பான மேறி. ஆணையாஞ் சிவத்தைச் சார
அணைபவர்”
(752) என்றதும் ஆண்டுரைத்தவையும் ஈண்டுச் சிந்திக்கற்பாலன. (II-
பக்.948); சிவம் - இலயம் போகம் அதிகாரங்களுக்கு மேலாய்ப், புறப்பொருளை
நோக்காது பேரறிவு மாத்திரையாய், எங்கும் நிறைவுடையதாய்ச், சத்தாய்ச்,
சுயஞ்சோதியாகிய ஞானப்பிழ்பாய் நிற்கும் சைதன்னியம்; நிட்களசிவம் என்பர்.
இவரிருப்பது ஆயிரமிதழ் அமலநிராதார கமல மெனப்படும். பங்கயத்தானங்கள்
மூலாதாரம், நாபி, இருதயம், முகம், துவாதசாந்தம் என்பதும் ஓர்வகை.
 
     “பாரணவும் புலனந்தக் கரண மொன்றும் படராமே நடுநாடி பயிலு நாதங்,
காரணபங் கயன்முதலா மைவர்வாழவுங் கழிவுநெறி வழிபடவுங் கருதி மேலைப்,
பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிவு நோக்கிப் புணர்ந்தணைந்த சிவானுபவ போக
மேவுஞ், சீரணவுமவரன்றோ வெம்மையாளுஞ் சித்ததைச் சிவன்பாலே வைத்துளாரே”
என்னும் புராணசார விளக்கமுங் காண்க.
 
     தாரணை - தரித்தலால் வரும் நிலை. வழி - நெறி; ஞானயோக நெறி; பூரணம்
- நிறைவு; வியாபகம்;
 
     காரணபங்கயம் ஐந்தின் கடவுளர் - ஐந்தொழிற்கும் காரண கர்த்தர்களாகிய
ஐவரும் சிவத்தின்வழியே போந்து அவராணையின் நிகழ்வார் என்பதாம். இக்கூறிய
பிரமன் முதலியோர் பிறந்திறந்துழலும் பசுக் கூட்டத்துட்பட்ட “ஆட்டுத்
தேவர்”களோடு மயங்கி யறிதற்பாலரல்லர்; “செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ, அத்தனென்றரி யோடு பிரமனும், துத்தியஞ்