பக்கம் எண் :

பெரியபுராணம்465

மதிலாற் சூழப்பட்டுள்ளது; செல்வன் - மேம்பட்ட ஐசுவரியத்தை யுடையவன்; சிவன்;
செல்வநெறி - முத்திநெறி; செல்வம் -முத்தித்திரு; அணித்தாய - மிக
அணிமையாகிய; சமீபித்த; திருவாரூர்ப் பிறந்தார்களைப் பணிதல் முத்தியை
அணிமையில் தேடித்தரும் என்பதாம்.
    

     விரி :- 4158. (இ-ள்) அருவாகி...மணவாளன் - அருவமாயும், உருவமாயும்,
எல்லாப் பொருள்களுமாயும் நின்ற பெருமானும், மணம் நிறைந்த கூந்தலையுடைய
உமையம்மையாரது மணவாளனாரும் ஆகிய இறைவர்; மகிழ்ந்தருளும் திருவாரூர்ப்
பிறந்தார்கள் - மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருவாரூரில் பிறந்தவர்களுடைய;
திருத்தொண்டு....தகைமையதோ - திருத்தொண்டினைச் சிறியேனால் ஒருவாக்கினாலே
தெரிந்து உணரும்படி உரைப்பது இயலும் தன்மையதாகுமா? ஆகாது. என்றபடி.
 
     (வி-ரை) இப்பாட்டுப் பல பிரதிகளில் இல்லை.
 
     அருவாதல் - உருவாதல் - இறைவரது பொதுவியல்பெனப்படும் தடத்த
இலக்கணம்.
 
     அனைத்துமாய்நின்ற - எல்லாமாய் நிற்கும்நிலை. ஆதல் - நிறைதல் என்ற
பொருளில் வந்தது; எங்கும் நிறைந்த தன்மை; சர்வ வியாபகம் என்பர்; ஆய் -
மாயையினால் எல்லாவற்றையும் ஆக்கும் தன்மை குறித்தது என்றலுமாம். நின்ற
திருத்தாண்டகப் பொருளைப் பார்க்க. "அவையே தானே யாய்" - (போதம் - 2)
"அருவமு முருவா ரூப மானது மன்றி நின்ற வுருவமு மூன்றுஞ் சொன்ன வொருவனுக்
குள்ள வாமே." (சித்தர்).
 
     உணர உரைத்தல் ஒருவாயால் ஆம் தகைமையதோ என்க. "ஒருநாவுக் குரை
செய்ய வொண்ணாமை" (1266) என்ற கருத்து. ஓகாரம் எதிர்மறை குறித்தது.
 
     திருத்தொண்டு - திருத்தொண்டுகள்; சாதியொருமை.
 
     தேர்ந்துணர - தெரிந்துரைக்க - என்பனவும் பாடங்கள்.         1
 
4159. திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் றிருக்கணத்தார்
பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்க ளாதலினால்
றருக்கியவைம் பொறியடக்கி மற்றவர்தந் தாள்வணங்கி
யொருக்கியநெஞ் சுடையவர்க்கே யணித்தாகு முயர்நெறியே.        2
 
     (இ-ள்) திருக்கயிலை...ஆதலினால் - பெருக்கிய சிறப்பினையுடைய திருவாரூர்ப்
பிறந்தார்கள் திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானது கணங்களே யாவார்கள்;
ஆதலினாலே; தருக்கிய....உடையவர்க்கே - செருக்குடன் எழும் ஐம்பொறிகளையும்
அடக்கி மற்று அவர்களுடைய திருவடிகளை வணங்கி ஒற்றுமைப்படுத்திய
மனத்தையுடையவர்களுக்கே உயர்நெறி அணியதாகும்.
 
     (வி-ரை) பிறந்தார்கள் - கணத்தார்கள் - ஆதலினால் என்க;
சிவகணத்தவர்களே அத்தவத்தினால் திருவாரூரில் வந்தவதரிக்கப்பெற்றவர்கள்;
"திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார்" (3592). ஆதலினால் -
கணத்தவர்களே இவர்களாதலினால் இவர்களது திருவடி வணங்குதல் சிவகணங்களை
வணங்கிய பயன் தந்து உயர்நெறியினை அணுகச் செய்யும் எனக் காரணக் குறிப்புப்பட
உரைக்க. திருக்கணங்களே என்ற தேற்றேகாரமும், ஐம்பொறியும் என்ற முற்றும்மையும்
தொக்கு நின்றன.