பக்கம் எண் :

பெரியபுராணம்467


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

62. முப்போதுந் திருமேனி தீண்டுவார் புராணம்

_ _ _ _ _
 

     தொகை
 

   
“முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (10)
 

வகை
 

“நெறிவார் சடையாரைத் தீண்டிமுப் போதுநீ டாகமத்தின்
அறிவால் வணங்கியர்ச் சிப்பவர் நம்மையு மாண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணுமெண் டோளுந் தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை வாய வுலகினிலே”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (74)
 

விரி
 

4160.     எப்போது மினியபிரா னின்னருளா லதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போது மார்வமிகு மன்பினராய்
முப்போது மருச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர்.             1
 
     புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பதினொன்றாவது, பத்தராய்ப்பணிவார்
புராணத்துள், ஐந்தாவது, முப்போதுந் திருமேனி தீண்டுவார் புராணம் கூறத்தொடங்கி
அவர்களது பண்பு கூறுகின்றார்.
 
     தொகை :- பொழிப்பு உரைத்துக் கொள்க. முப்போதும் - காலை, நண்பகல்,
மாலை என்ற மூன்று சந்திப் பொழுதுகள். “முட்டாத முச்சந்தி மூவா யிரவாக்கு
மூர்த்தியென்னப் பட்டானை” (நம்பி - கோயில் - 7) “சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியர்” (நம். தேவா); உம்மை முற்றும்மை; திருமேனி -
சிவலிங்கம் முதலிய சிவக் குறிகள்; தீண்டுதல் - தீண்டித் திருமஞ்சன மாட்டுதல்,
அணி, மாலை, சாந்து, சாத்துதல் முதலாகிய அகம்படித் தொண்டு செய்தல். திருமேனி
- வடிவம்; இறைவருக்குத் திருவைந்தெழுத்தும் பஞ்சப்பிரமம் முதலிய மந்திரங்களும்
தூலவடிவம்; ஆன்மா சூக்குமவடிவம்; சித்சத்தி அதிசூக்கும் வடிவம். மந்திர நியாசம்
செய்யப்பட்ட சிவலிங்கம் முதலிய வடிவுகளும் இப் பெயரான் திருமேனி யென்று
உபசாரமாக வழங்கப்படும்.