அருளிச்செய்த - அருளிச் செய்யப்பட்டவை, அகரவீற்றுப் பன்மைப் பெயர். |
மோகாதி - காமம், குரோதம், லோபாம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு தீக்குணங்கள். மோகாதி - வடமொழிச் சந்தி; கற்பம், அனுகற்பம், உபகற்பம் - என்ற மூன்றுவகைத் திருநீறும் தீக்கை பெறுதற்குரிய சைவர்களுக்கு உரியது; அகற்பம் இவையல்லாதது; தீக்கைக் குரியரல்லா தார்க்குரியது அசைவவிபூதி எனப்படும்; இதனை ஆகாதென் றங்குரைத்த அகற்பம் என்றார்; கற்ப முதலிய மூவகை நீறும் வைதிகம், இளெகிகம் என இரண்டு வகையுள் இலெகிளகத்திற் சேர்ந்தவை; இவற்றுள் வைதிகவிபூதி - பிரமன் ஓமகுண்டத்திற் றோன்றும் புரோதனி என்றும், பிராம்மணரது ஓமகுண்டத்திற் றோன்றும் சத்தியோசாதை என்றும் இருதிறப்படும்; முன்கூறிய கற்ப முதலிய மூன்றும் உற்பத்தி வேறுபாட்டால் அம்மூவகையாயின. இவற்றின் விரிவெல்லாம் சிவாகமங்களுள்ளும் சைவசமயநெறி முதலிய நூல்களுள்ளும் கண்டுகொள்க. ஆம் - ஆகும் என்பதன் இடைக்குறை; |
குற்றங்களறுக்கும் நீறு - உயிர்களைக் காத்தல் செய்தலின் இரட்சை என்றும், பாவங்களை நீறுசெய் தமிழித்தலின் நீறு என்றும், சிறந்த செல்வமாதலின் விபூதி என்றும், அஞ்ஞான அழுக்கைப் போக்குதலால் சாரம் என்றும், ஞான வொளியைத் தருதலின் பசிதம் என்றும் இவ்வாறு பல காரணப் பெயர்கள் போதரும் குறிப்பாம். |
முன்மொழிந்த மூன்றுபேதம் - கற்ப முதலிய மூன்று. |
மொழிவதுநம் - என்பதும் பாடம். 1 |
கற்பநீறு |
4164. | அம்பலத்தே யுலகுய்ய வாடு மண்ண லுவந்தாடு மஞ்சினையு மளித்த வாக்கள் இம்பர்மிசை யநாமயமா யிருந்த போதி லீன்றணிய கோமயமந் திரத்தி னாலேற் றும்பர்தொழ வெழுஞ்சிவமந் திரவோ மத்தா லுற்பவித்த சிவாங்கிதனி லுணர்வுக் கெட்டா எம்பெருமான் கழனினைந்தங் கிட்ட தூநீ றிதுகற்ப மென்றெடுத்திங் கேத்த லாகும். 2 |
(இ-ள்) அம்பலத்தே.....ஆக்கள் - உலகம் உய்யும்படி திருவம்பலத்திலே திருக்கூத்து ஆடுகின்ற இறைவர் திருவுளமகிழ்ந்து திருமஞ்சனம் செய்தருளும் ஆனைந்தினையும் தரும் பசுக்கூட்டங்கள்; இம்பர்....போதில் - இவ்வுலகில் நோயில் லாதவையா யிருந்தபோது; ஈன்றணிய கோமயம் - கன்றீன்று அணிமையாகிய பசுவின் சாணத்தை சத்தியோசாத மந்திரத்தினால் ஏற்று; உம்பர் தொழ...சிவாங்கிதனில் - தேவர்கள் தொழும்படி மேல் ஓங்கி எழுகின்ற சிவமந்திரங்களால் உண்டாக்கப்பட்ட சிவாக்கினியில்; உணர்வுக்கு....தூநீறு - உணர்வுக்கு எட்டாத எமது பெருமானது திருவடியை நினைந்து இட்டெடுத்த தூயதிருநீறு; இது.....ஆகும் - இது கற்ப மென்று எடுத்துச் சொல்லப்படும். |
(வி-ரை) அஞ்சு - ஆனைந்து; பஞ்சகவ்வியம் என்பது வடமொழி. எண்ணலளவை யாகுபெயர். |
அநாமயம் - நோயின்மை. ந - ஆமயம் - அநாமயம்; ஆமயம் - நோய். “ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்” (அரசு - அதிகை - தாண்) |
ஈன்றணிய கோமயம் - கன்றீன்று அணிமையாகிய பசுவின் சாணம்; மயம் - சாணம். |