வருக்கம் - வரிசை; அடைத்தல் - அடைவுபடக் கூறுதல்; பெருக்கு அம்மதுரத் தொகை - என்க; அகரம் பண்டறிசுட்டு; மதுரத்தொகை - திருத்தொண்டத் தொகை; பெருக்குதலாவது அளவுபடாத தொகை யடியார்களை எடுத்துக் கூறுதல்; தொகையடியார்களின் முடிபு காட்டுமிடமாதல் குறிப்பு; பண்பு கூறிப் பெருகச் செய்தல்; கழற்கே ஒருக்கு மனத்தொடு - சார்ந்தவர் என்று கூட்டுக; கழற்கே - உருபு மயக்கம்; தொகை என்று - தெரிக்கும் என இயைக்க; பெய் - கட்டிய; அணிந்த; கழல் - கழலையணிந்த திருவடிக்கு வந்தது; பெருக்கும் - என்றதனால் அப்பாலும் - என்றதற்கு இடத்தால் அப்பால் என்றும், காலத்தால் அப்பால் - முன்னும் பின்னும் - என்றும் இதனைப் பெருக உரைத்தது விரிநூல்; இவ்வாறன்றி ஒருக்கு மனத்தொடு என்றதனை நாவலூர் மன்னவனுடன் கூட்டி உரைத்தனர் முன் உரைகாரர்; ஒருக்கு மனத்தொடு சார்ந்தவர் - என்க; சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகுதல்; அப்பாலுமடிச்சார்ந்தார்கள் எனப்படுவோர் தவமுதிர்ச்சியினாற் சிவகணத்தோரேயாவர் என்பது. மதுரம் - இனிமை; இன்பம்; பேரின்பம். |
விரி :- 4169. (இ-ள்) மூவேந்தர்.......முறைமையோரும் - மூவேந்தர்களது தமிழ் வழங்கும் நாடுகளுக்கு அப்பால் சிவபெருமானாரது அடியினைச் சார்ந்த முறைமையினர்களும்; நாவேய்ந்த......பின்னும் - நம்பிகளது தெய்விக நாவின்கட் பொருந்திய திருத்தொண்டத் தொகையிலே துதிக்கப்பட்ட திருத்தொண்டர்களாகிய தனியடியார்களின் காலத்துக்கு முன்னும் அதன் பின்னும்; பூவேய்ந்த...அடிச்சார்ந்தாரும் - பூக்கள் பொருந்திய நீண்ட சடையின் மேலே அடம்பு மலரும் தும்பை மலரும் கங்கையும் கொன்றையும் பொருந்தும்படி சூடிய, இடபத்தைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியினையுடைய சிவனது திருவடியிற் சார்ந்தார்களும்; செப்பிய...தாமே - சொல்லப்பட்ட அப்பாலு மடிச்சார்ந்தார் எனப் பெற்றவர்கள் தாமே யாவர். |
(வி-ரை) மூவேந்தர் தமிழ்வழங்கு நாடு - என்றது, தமிழ் வழங்காத நாடுகளும் மூவேந்தர் கீழ் நின்றன வாதலின் அவற்றுள் தமிழ் வழங்கு நாட்டை வேறு பிரித்து ஓதினார். பிறிதினியைபு நீக்கிய விசேடணம். |
தமிழ்வழங்கு நாட்டினை வேறு தணியாகக் கூறினமை திருத்தொண்டத் தொகையுள் போற்றப்பட்ட அடியார்கள் பெரும்பான்மையும் தமிழ் வழங்கு நாட்டினுட் சேர்ந்தவர்களாதலின் என்க; தமிழ் வழங்கும் நாடல்லாத பிறமொழி வழங்கும் 17 நாடுகளிலும் சிவனடிச் சார்ந்த தொண்டர்களுண்டு என்பதாம்; இவர்கள் இடத்தால் அப்பாலும் அடிச்சார்ந்தார். இவை சிங்கள முதலாகக் கூறப்படும். |
திருத்தொண்டத் தொகை.......முன்னும் பின்னும் என்பது காலத்தால் அப்பாலும் அடிச்சார்ந்தார்களைக் குறித்தது. காலத்தாலும் பெரும்பான்மை பற்றி அடியார்கள் திருத்தொண்டத் தொகையுட் டனித்தனி எடுத்துக் கூறப்பட்டார்கள். முன் - இறந்த காலத்தினையும், பின் - என்பது எதிர்காலத்தினையும் உணர்த்த நிறுத்தித் திருத்தொண்டத் தொகையுட் போற்றப்பட்ட அடியார்களின் காலத் தொகுதியை நிகழ்காலமாக வைத்து, முக்காலத்தும் என விரித்த நிலை கண்டு கொள்க. |
அப்பாலும் - இடத்தாலும் காலத்தாலும் அப்பால்என்று விரிநூலுள் உரை விரித்தனர் ஆசிரியர். சைவத்தின் பரந்த முற்றிய நிலையினை நாட்டிக் காட்டியருளுவது இத்திருப்பாட்டு. |
அடிச்சார்ந்தார் - திருவெண்காட்டடிகள் முதலாயினோர். இப் பாட்டால் சைவத்தின் சமரசம் நன்கு விளங்குதல் காண்க என்றும், சைவத்தைத் தமிழ் |