பக்கம் எண் :

பெரியபுராணம்481

நாட்டளவில் கட்டி ஆளக்கருதும் கண்மூடிகள் இப்பாடலைப் பன்முறை உற்று
நோக்கி உண்மை யுணர்வார்களாக
என்றும் இங்கு விசேட ஆராய்ச்சியுரை
காண்பாரு முண்டு. சமரசம் என்ற உரைப் பொருளுக்கு ஈண்டு ஒரு தொடர்புமில்லை.
பொருளிரண்டாயினன்றோ சமரசம் காணலாம்; இங்குத் தமிழ் வழங்கு நாட்டுக்கப்பாலும்
சிவனடிச்சார்ந்தோர் உண்டு என்பது தான் கருதிய பொருள் தமிழ் நாட்டுக்கப்பாலும்
சிவனடிச்சார்ந்தோர் உள்ளார் என்றதனால் அங்கு உள்ளார் எல்லாரும்
சிவனடிச்சார்ந்தோர் என்றாவது, அங்குள்ளன வெல்லாம் சைவநெறி என்றாவது
ஆகாது; அந்நாடுகளிலுள்ள கிறித்தவம், பௌத்தம், சமணம் முதலிய புறச்சமயங்கள்
எல்லாம் சைவமே என்னவும் வாராது; அவை, ரூபாவில் பைசா அணாக்கள் போல,
இலைமறைகாய்கள் போலச் சைவ உண்மைகள் சிலவற்றைக்காட்டினால் அது கொண்டு
அவை முழுமைச் சைவத்தோடொப்பன என்றலும் ஆகாது. அன்றியும் அமெரிக்கா,
சாவகம், கடாரம் முதலிய புறநாடுகளிலும் மிகப் பழங்காலங்களில் சிவலிங்க வழிபாடு
இருந்த அடையாளங்கள் இப்போதும் காணப்படுகின்றன என்பது சரித
ஆராய்ச்சியாளர்கள் கண்டவுண்மை. இனிச் சமரசம் என்பது உண்மைப் பொருளில்லாத
நிலையில் ஈண்டு வழங்கப்பட்டுள்ளது; எவ்வெப் பொருளையும் அவ்வவற்றின் தகுதிக்
கேற்பப்
படிமுறையில் (சோபான பட்சம்) வைத்து நிறுத்திக் காணுதலே சமரசம்
என்பதன் உண்மைப் பொருளாம். இப்படிக்கன்றிக் காண்பன வெல்லாம் சமமே என்பது
குருட்டுச் சமரசமேயாகும். இனி, எம்மொழியோ எந்நாடோ யாண்டிருப்பினும்
சைவத்தின் மெய்பொருணிச்சயம் கொண்டதுவே சைவமாவது என்பது “அப்பால்
முதல்வனா ரடிச்சார்ந்த முறைமை யோரும்”
என்றதனாலும், “சேவேந்து
வெல்கொடியா னடிச்சார்ந்தார்
என்றதனாலும் விளக்கப்பட்டது. “சிவன் கழற்கே
ஒருக்குமனத் தொடு
என்ற வகைநூலும் காண்க. இவற்றை யெல்லாம் விடுத்துக்,
காலமும் இடமும் கூறி அப்பால் என்ற துணையானே, தமிழ் நாட்டின் மேல் உள்ளன
வெல்லாம் சைவத்தின் முடிந்ததிறமே யாம் என்று முடிப்பது உண்மை யுணராதார்
கூற்றேயாம். அன்றியும், “பேசி லத்திசை யொவ்வா பிறதிசை” (46) என்ற திருவாக்கின்
கருத்தும் உணரத் தக்கது. இக்கூறியவை யெல்லாம் எண்ணும்போது கண்மூடிகள் யாவர்
என்பது போதரு மென்று விடுக்க.
 

     தமிழ் விளங்கு - என்பதும் பாடம்.                            1
 
     அப்பாலு மடிச்சார்ந்தார் புராணம் - பண்பு - மூவேந்தர்களது தமிழ்
வழங்கும் நாட்டுக்கு அப்பாற்பட்ட நாடுகளிலும், திருத்தொண்டத் தொகையிற்
போற்றப்பட்ட அடியார்களது காலத்துக்கு முன்னும் பின்னும் சிவபெருமானது
அடிச்சார்ந்தவர்கள் அப்பாலு மடிச்சார்ந்தார் எனப்படுவார்கள்.
 
     கற்பனை :- (1) மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கப்பாலும் சிவனடிச்
சார்ந்தவர்கள் நம்மால் வணங்கப்படுபவராம்.
 
     (2) திருத்தொண்டத்தொகையிற் றனித்தனி போற்றப்பட்ட அடியார்களின்
காலத்துக்கு முன்னும் பின்னும் சிவனடிச்சார்ந்தவர்கள் நம்மாற் போற்றப்படுதற்
குரியவர்கள்.
 
     (3) சிவனடியார்களின் தொகுதி காலத்தையும் இடத்தையும் கடந்தது;
எக்காலத்திலும் எவ்விடத்திலும் நிகழ்வது சிவனடிமைத் திறம்.
 

அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் முற்றும்