வகை :- பதும.......என்று - தாமரையின் நல்லமலர் போன்ற பாதத்தையுடைய சிவனுக்கு ஒரு கோயிலை யான் விரைவாக அமைப்பது எப்போது என்று கவன்று; கண்டுயிலாது....என்பர் - கண் உறக்க மின்றி அதனையே பகலுமிரவும் தமது மனத்தில் நினைந்து அந்நினைப்பினாலே கோயில் எடுத்துத் திருவருளினைப் பெற்றது என்று எடுத்துக் கூறுவர்; புது...பூசலையே - புதிய மணற் கானல்வழியே தென்றற் காற்று வந்து வீசுதற்கிடமாகிய திருநின்றவூரில் வந்த பூசலார் நாயனாரையே. |
கோயிலைச் செய்குவதென்று கொலாம் - நிதியின்மையால் கோயில் அமைக்க வழியின்றி வேறு எவ்வாற்றானமைப்பேன் என்று கவலைப்பட்ட நிலை; கண்துயிலாது........நினைந்து - தூக்கமின்றி அப்பொருளையே நாள்தோறும் எண்ணி; எல்லி - பகல்; இங்கு நாள்என்ற பொருளில் வந்தது. எல்லி தோறும் - நாடோறும்; நினைந்து - நினைப்பினாற் கோயில் அமைத்து; “நினைவினை” (4171) என்பது விரிநூல்; பூசலைப் (பற்றி) - நினைந்தருள் - பெற்றது - என்பர் என்று கூட்டுக. நினைந்து - பெற்றது என்க. |
ஊரும் பேரும் பண்பும் தொகைநூல் பேசிற்று; இவற்றுடன் வரலாறும் வகைநூல் வகுத்தது. |
விரி : - 4171. (இ-ள்) அன்றினார்.......எண்ணி - பகைவர்களுடைய புரங்களை எரித்த சிவபெருமானுக்கு ஒருகோயில் அமைக்க எண்ணி; ஒன்றும் அங்கு உதவாதாக - அதற்கு வேண்டும் நிதி ஒரு சிறிதும் அங்குக்கிடையாமற் போக; உணர்வினால்......என - நினைப்பினாலே அமைத்தலே நல்ல பணியாகும் என்று உட்கொண்டு; மனத்தினாலே...உற்றாம் - மனத்தினாலே நல்ல கோயிலை அமைத்த திருநின்றவூரில் வந்த பூசலாருடைய நினைப்பினாலாகிய வரலாற்றினைச் சொல்கின்ே்றாம். |
(வி-ரை) அன்றினார் - பகைவர்; “அன்றின ரரியென வருபவர்” (பிள்- வீழி - வியாழக்கு - திருவிரா - 6); எடுத்தல் - அமைத்தல்; கட்டுதல்; ஒன்றும் - பொருள் ஒரு சிறிதும்; முற்றும்மை. |
உதவாதாக - பெறாது போக. |
உணர்வினால் எடுக்கும் - மனத்தின் நினைத்தலாலே அமைக்கும்; நன்று - இதுவே சிறந்ததாகச் செய்யத்தகுந்தது. |
மனத்தினாலே....செய்த - மனத்தின் செயலாற் கோயில் அமைத்த; மனத்தினாலே - செய்த என்று கூட்டுக. |
நினைவினை - நினைப்பினாற் செய்த திருப்பணியினை; இப்பாடல் சில பிரதிகளில் இல்லை. |
எடுக்க வேண்டி - என்பதும் பாடம். 1 |
4172. | உலகினி லொழுக்க மென்று முயர்பெருந் தொண்டை நாட்டு நலமிகு சிறப்பின் மிக்க நான்மறை விளங்கு மூதூர் குலமுதற் சீல மென்றுங் குறைவிலா மறையோர் கொள்கை நிலவிய செல்வ மல்கி நிகழ்திரு நின்ற வூராம். 2 |
(இ-ள்) உலகினில் ......நாட்டு - இ ந்நிலவுலகில் நல்லொழுக்கம் எக்காலத்திலும் உயர்ந்து ஓங்கும் பெருமை யுடைய தொண்டை நாட்டிலே; நலமிகு.......மூதூர் - நலம் மிக்க சிறப்புடைய நால்வேதங்களும் விளங்குதற் கிடமாகிய பழைய ஊராகும்; குலமுதல் ....திருநின்ற ஊராம் - குலத்திற்கு முதன்மையாகிய ஒழுக்கம் எந்நாளும் குறைவில்லாத மறையவர்கள் தமது கொள்கையின் நிலைநின்ற செல்வம் நிகழ்கின்ற திருநின்ற வூராகும். |