திரட்டி - ஒன்று சேர்த்து; வேண்டும் நிதியம் முற்றும் சேகரித்துக் கூட்டி. |
மனத்தினாற் - தேடி - நைவார் - பொருள் வளமில்லாதார் பணி செய்யப் புகின் உலகம் ஆதரிக்காது வருந்தச் செய்யும் என்னுமியற்கை குறித்தது. ஏன்? பொருள் வளமுள்ளார் தேடினும் உலகர் பணம் மனமுவந்து சிவன் பணிக்குதவ முன்வராதது கண்கூடன்றோ? நைவார் - நைவாராகி; முற்றெச்சம்; நைவாராகிய நாயனார் என்று வினைப்பெயராக வுரைப்பினுமாம். |
மனத்தினாற் றிரட்டிக் கொண்டு - செல்வம் திரட்டுதல் மனத்தின் றொழிலிற் றொடங்கும். அது முற்றினால் புறச் செல்வம் விளையும், ஈண்டு நாயனார் அகச் செல்வமே ஆணிவேர் என்பதனை உணர்ந்து அதனைத் தேடி அமைத்தார். அகத்தொழிலே வினைவிளைவுக்குக் காரணமாகும் தன்மை திருமலைச் சிறப்பிற் காண்க. 5 |
4176. | சாதனத் தோடு தச்சர் தம்மையு மனத்தாற் றேடி நாதனுக் கால யஞ்செய் நலம்பெறு நன்னாட் கொண்டே ஆதரித் தாக மத்தா லடிநிலை பாரித் தன்பாற் காதலிற் கங்குற் போதுங் கண்படா தெடுக்க லுற்றார். 6 |
(இ-ள்) சாதனத்தோடு.....தேடி - கோயில் கட்டுதற்குரிய சாதனங்களோடு தச்சர்களையும் மனத்தினாற் றேடிக்கொண்டு; நாதனுக்கு......நன்னாட் கொண்டே - இறைவருக்கும் கோயில் செய்தற்குரிய நன்மை பெறும் நல்ல நாளும் வேளையும் குறிக்கொண்டு; ஆதரித்து....பாரித்து - விரும்பி ஆகம விதிப்படி அடிநிலை எடுத்து; அன்பால்......எடுக்கலுற்றார் - அன்பின் நினைவினாலே ஆசை மிகுந்து இரவினும் உறங்காமல் கோயில் எடுக்கலாயினார். |
(வி-ரை) சாதனம் - கோயில் எடுப்பதற்கு வேண்டும் கல் - மண் சுண்ணம் - மரம் முதலாயின. |
தம்மையும் - தேடி - முன் பாட்டிற் பொருள் தேடியது பற்றிக் கூறியவாறே என்று இறந்தது தழுவிய எச்சவும்மை. |
தச்சர் - கல் - மண் - மரமிவற்றாற் கோயில் எடுக்கும் பணியாளர்; சிற்பிகள். |
நலம்பெறும் நன்னாட்கொண்டே - நன்மை பெறுவிக்கும் நன்னாளும் ஓரையும் நிச்சயித்து அந்நாளில் அவ்வேளையில் தொடங்கி; |
ஆலயம் செய்நாள் - ஆலயப் பணிக்குரிய நாள்; செய் - கட்டுதற்குரிய. |
நலம்பெறும் - நலத்தினைப் பெறுவிக்கும்; செய்யும். |
கொண்டே - ஏகாரம் தேற்றம். |
ஆகமத்தால் - கோயில் சிற்பமும் கணிதமும்பற்றிச் சிவாகமங்களிற் கூறும் விதியின்படி அளவு முதலியவை கண்டு; மேல் வரும் பாட்டுக்களில் உரைப்பனவும் சிவாகமங்களில் விதித்த கோயிற் சிற்ப அமைப்புக்கள். |
அடிநிலை - கடைகால்; அஸ்திவாரம் என்பர்; பாரித்தல் - பரப்புதல் - கால்கொள்ளுதல். |
அன்பால் - காதலில் - ஆலயம் எடுத்தல் அன்பினாலும், அதனைக் கங்குல் போதும் கண்படாதெடுத்தல் காதலாலும் ஆவன. காதல் - ஆசை; விரைவில் எடுத்து முடித்துக் காணும் ஆசை; முறுகிய அன்பினால் விளைவது ஆசை. கங்குற்போதும் - உயிர்கள் எல்லாம் கண்படும் கங்குலிலும் என உம்மை சிறப்பு. பகற் போதில் ஓய்வின்றி எடுப்பதன்றிக் கங்குலிலும் என இறந்தது தழுவிய எச்சமுமாம். 6 |