பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்490

4177.     அடிமுத லுபான மாதி யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கண் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானு முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயி னிரம்பிட நினைவாற் செய்தார்.         7
 
     (இ-ள்) அடிமுதல்.....வகுத்து - அடி வரி முதல் உபான வரி முதலாக வரும்
அடுக்குகள் எல்லாவற்றையும் சித்திர வேலைப்பாடுகள் திருந்த மனத்தினாலே
அமைத்து; மானம்...கொண்டு - விமானத்தின் முடிவில் வரும் சிகரமும் விதித்த
முழஅளவிற் கொண்டு; நெடிது நாள் ....செய்தார் - நீண்ட நாட்கள் செல்லக் கோயில்
நிறைவுபட நினைப்பினாலே செய்தனர்.
 
     (வி-ரை) அடி - அடிநிலை வரி; உபானம் - கோபுரத்தின் அடிக்கீழ்
அமைக்கும் முதற் சித்திர வரி.
 
     ஆதியாகிய படைகள் - அடி உபானம் என்பன வாதியாகப் பெயர் வழங்கும்
அடுக்கு வரிசைகள்; படை - அடுக்கு; படு - பகுதி; படுத்தல் - பொருந்த வைத்தல்;
படவைப்பது படை.
 
     வடிவுறுத்தொழில்கள் - அவ்வப் படைக்கும் உரிய தொழில் வேலைப்பாட்டுத்
திறம் பொருந்திய அழகு.
 
     மானம் முடிவுறு சிகரம் - விமானம் என்றது மானம் என நின்றது; விமானமும்
சிகரமும் முடியும் அளவுகளை அவ்வக்கோயில் மூலமூர்த்திகளுக் கேற்றவாறு
அளவுபடுத்தும் விதிகள் சிவாகமங்களி்ல் உண்டு; முடிவுறு என்றார் விமானப்பணி
ஏனைய ஆலய அமைப்புப் பணிகள் நிரம்பியபின் இறுதியிற் செய்யப்படுதல் குறிக்க.
சிகரம் - விமானத்தின் கூரிய உச்சியமைப்பு.
 
     முன்னிய முழம் - விதித்த முழ அளவு; முழம் - ஆலய சிற்பத்திற் கூறப்பட்ட
அளவுள்ளது. கரமானம் - முழுஅளவு - 24 அங்குலம் என்பர். தேவாங்குலம்
மானாங்குலம் என்னும் வகையுள் இங்குத் தேவாங்குலம் கொள்ளப்படும். முழம் -
நீட்டலளவை.
 
     நெடிது நாள் கூட - ஆலயங்கள் அமைத்தலிற் படும் கால தாமத எல்லைக்
குறிப்பு; பல நாள் செல்லும்படி.
 
     நினைவால் - நினைப்பினாலே;                                    7
 
4178. தூபியு நட்டு மிக்க சுதையுநல் வினையுஞ் செய்து
கூவலு மமைத்து மாடு கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியுந் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னுந்
தாபரஞ் சிவனுக் கேற்ப விதித்தநாள் சாரு நாளில்,                  8
 
4179. காடவர் கோமான் கச்சிக் கற்றளி யெடுத்து முற்ற
மாடெலாஞ் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமா லறியா தாரைத் தாபிக்கு மந்நாண் முன்னாள்
ஏடலர் கொன்றை வேய்ந்தா ரிரவிடைக் கனவி லெய்தி,              9
 
4180.   “நின்றவூர்ப் பூச லன்ப னெடிதுநா ணினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோ நீயிங்