பக்கம் எண் :

பெரியபுராணம்499

     (7) நிதியில்லவர் சிவன் கோயில் அமைக்க முயன்றால் உலகம் அவரை
ஆதரித்து நிதி தராது.
 
     (8) புறத்திலே கோயில் அமைக்க நிதியின்மையா லியலாமற் போயினும்,
அகத்திலே மனத்தினால் நிதியையும் சாதனத்தையும் தச்சரையும் தேடிக் கோயில்
அமைத்தால் அப்புண்ணியத்தினு மிக்க பேறு பெறலாம். இது யாவரும் செய்யத் தக்கது;
புறக்கோயிலமைத்தலினும் இது சிறந்ததுமாம்.
 
     (9) புறத்தே அமைக்கும் கோயிலினும் அகத்தே அமைக்கும் கோயிலினில்
இறைவர் மிக விரும்பி எழுந்தருளுவர்.
 
     (10) மனக்கோயிலின் பெருமை இறைவரே உலகறியச் செய்யும் சிறப்புடையது.
 
     தலவிசேடம் - திருநின்றவூர் :- இது தொண்டை நாட்டில் உள்ளதோர் பதி;
தேவாரப் பாடல் பெறாவிடினும் பூசலார் நாயனார் அவதரித்து மனக்கோயில்
அமைத்துப் பணி செய்து அதில் இறைவரைத்தாபித்துப் பல நாள் பூசித்து
இறையடியடைந்த சிறப்புடைய பதி; திருத்தொண்டத் தொகையுட் பேசப்படுதலால்
தேவார வைப்புத் தலமுமாம். இப்போது தின்னனூர் என்று மருவி வழங்கப்படுகின்றது.
இங்குச் சிவாலயம் உண்டு. அதில் பூசலார் நாயனாரது திருவுருவம் தாபித்து வழிபடப்
பெறுகின்றது. கோயில் நன்கு கவனிக்கப்படுகின்றது. சுவாமி - மனக்கோயில் கொண்ட
நாதர்
; அம்மை - உமையம்மை.
 
     இது தின்னனூர் என்ற நிலையத்தினின்றும் தெற்கே கற்சாலை வழி ஒரு
நாழிகையளவில் அடையத்தக்கது. (தின்னனூர் நிலையத்தினின்றும் நேர் வடக்குக்
கற்சாலை வழி 12 நாழிகை சென்றால் ஆரணியையடைந்து, அங்கு நின்றும் 6
நாழிகையளவில் திருக்கள்ளில் என்ற தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலத்தை
அடையலாம்.)
 
     கச்சிக்கற்றளி - (4179) காஞ்சிபுரத்தில் உள்ள கைலாச நாதல் கோயில் என்பர்.
இது மிகச் சிறந்த சிற்ப ஓவிய வேலைப்பாடுகளமைந்தது. திருக்கயிலாய மலையின்
இயற்கையமைப்பினைப் போலவே சிகரங்களுடன் காணக் கோயில் அமைக்கப்பட்ட
தென்பர். நாட்டுச் சரித்திர சம்பந்தமான சிறப்புக்கள் பலவுடையது.
 

65. பூசலார் நாயனார் புராணம் முற்றும்.