பக்கம் எண் :

பெரியபுராணம்5

புரியும். நிகழ்காலத்தாற் கூறியது ஆசிரியரது காலத்தில் சேரநாடு சேரமன்னர்களால்
ஆளப்பட்டுவந்தமை குறித்தது; குலமூதூர் - குலம் - மேம்பாடு; கோமூதூர் -
அரசரது தலைநகர்.
 

     இப்பாட்டினால் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, பழஞ்சரிதம், குடிவளம் முதலிய
பலவும் கூறிய திறம் கண்டு கொள்ளற்பாலது. நாட்டுவளம் முதலியவை முன்னர்
விறன்மிண்ட நாயனார் புராணத்துள் விரித்தமையால் ஈண்டுச் சுருக்கிக் கூறினார்.
 

     பல்புகழின் - சொல்புலவர் - என்பனவும் பாடங்கள்.               1
 
3749. காலை யெழும்பல் கலையினொலி களிற்றுக் கன்று வடிக்குமொலி
சோலை யெழுமென் சுரும்பினொலி துரகச் செருக்காற் சுலவுமொலி
பாலை விபஞ்சி பயிலுமொலி பாட லாடன் முழவினொலி
வேலை யொலியை விழுங்கியெழ விளங்கி யோங்கும் வியப்பினதால். 2

 

     (இ-ள்) காலை...கலையினொலி - காலையிலே பயிலப்படும் வேதம் முதலிய
கலைகளின் ஒலியும்; களிற்று....வடிக்குமொலி - யானைக் கன்றுகளின் பிளிற்றின்
ஒலியும்; சோலை....சுரும்பினொலி - சோலைகளினின்றும் எழுகின்ற மெல்லிய
வண்டுகள் பண் பாடும் ஒலியும்; துரக...சுலவுமொலி குதிரைகளின் செருக்கினாலே
கனைத்துச் சுழலும் ஒலியும்; பாலை...ஒலி - பாலை விபஞ்சியாழ் பயிலும் ஒலியும்;
பாடல்...ஒலி - பாடல்கள் ஆடல்களுக்கிசைய முழக்கப்படும் முழவின் ஒலியும்;
வேலை...வியப்பினதால் - (அங்கு மிகும்) கடலின் ஒலியினையும் கீழ்ப்படுத்தி மேல்
எழுந்து விளக்கம் பொருந்தி மேலோங்கும் வியப்பை யுடையது (அப்பதிதான்.)
 
     (வி-ரை) அப்பதி - வியப்பினது - என்று எழுவாய் முன் பாட்டினின்றும்
வருவிக்க.
 
     காலை எழும் பல்கலையின் ஒலி - கலைகளின் பயிற்சிக்கு உரிய காலம்
அதிகாலை என்பவாதலின் காலை எழும் என்றார்; பல்கலை - வேதமும்
கலைஞானங்களும். “கலை ஒலியால் துயிலெழுவ தன்றிக் கோழியின் எழாது எம்ஊர்”
(பரிபா.)
 
     வடிக்குமொலி - வடிக்கும் - திருந்திய - சிறந்த; வசமாக்கப் பழகும் என்பாரு
முண்டு; யானைகள் புறநகரில் உள்ளனவாதலால் அவற்றின் கன்றுகள் நகரில் இருத்தல்
கூறினார்.
 
     துரகச் செருக்காற் சுலவும் ஒலி - துரகம் - குதிரை; செருக்கு - மிக்க
களிப்பு; மிகுந்த வலிமையும், அவ்வன்மையினைச் செலுத்துதற்கு இடம் பெறாமை
கருதிக் கனைத்தலும் மேம்பாடும் குறித்தது. சுலவுதல் - இக்குதிரைப் பந்தியின் ஓர்
குதிரையினையே பின்னர் இந்நாயனார் மேல்கொண்டு கயிலையினை அடைந்த சரிதக்
குறிப்பும் காண்க.
 
     பாலை விபஞ்சி - பாலை விபஞ்சி யாழ் முதலிய வகைகள்; பாலை
ஏழுவகையாய் 103 பேதங்களுடையது; இவற்றின் விரிவு இசை நூல்களுட் காண்க.
விபஞ்சி என்பது யாழ் - வீணை - பண் என்ற பொதுப் பொருளில் வந்தது; பாலை
- யாழினைக்கூறியது கடலினின்றும் கொள்ளப்பட்டுத் திருந்திய நிலனும் குறிஞ்சியும்
முல்லையும் மயங்க நிற்கும் முறைமை பற்றிப் போலும் என்பதும் கருதப்படும். இது
பற்றி விறன்மிண்ட நாயனார் புராணத்துள் (491- 492) உரைத்தவை பார்க்க; இனி
விபஞ்சி - குறிஞ்சி யாழ்த்திறத் தொன்றெனக் கொண்டு (பிங்கலம்) பாலை யாழும்
குறிஞ்சித் திணைக்கேற்ற குறிஞ்சி யாழும் என எண்ணும்மை விரித்துரைத்தலுமாம்.