பக்கம் எண் :

பெரியபுராணம்543

 
     யாழின் மொழியாள் - யாழினும் இனிய மொழியாளாகிய; “யாழைப் பழித்தன்ன
மொழி மங்கை” (நம்பி - தேவா - மறைக்காடு).
 
     அம்மான் அருளாலே - உமையாள் - ஊட்ட - “துணைமுலைகள்,
பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத் தூட்டென்ன” (1964) என முன்கூறிய வரலாறுகள்
நினைவுகூர்க.
     ஞானம் - சிவஞானவமுதம் குழைத்த திருமுலைப்பால்; ஞானம் - ஞானங்
குழைத்த பாலுக்காகி வந்தது ஆகுபெயர்.
 
     எம்பெருமான் - எமது பரமாசாரியர்.
 
     வணங்குதற்கு - திருவாலவாயினிலும் திருவாரூரினிலும் இறைவரது கோயில்
பணியச் சென்றனர். இங்கு ஆளுடைய பிள்ளையாரது திருவடிகளை வணங்குதல்
குறித்து வந்தனர்.
 
     மறையோர் புகலியினில் - மறையவர்கள் பதியாகிய புகலியினில்; பிள்ளையாரது
திருவடிகளை வணங்குதற்காகவன்றி அங்குப்பாணனார் அணுக்கமாய்
வருதற்கியைபில்லை என்பது குறிப்பு. திருநாளைப்போவார் நாயனார் வரலாறு
பார்க்க.                                                            10
 
4225.     ஞான முண்டார் கேட்டருளி நல்ல விசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியாற் சிறப்பருளி யமரு நாளி லவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழி லிடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தி லுடனே பரமர் தாளடைந்தார்.          11
 
     (இ-ள்) ஞானமுண்டார்....நாளில் - (முன்கூறியபடி பாணனார் வந்த
செய்தியினைச்) சிவஞானமுண்டருளிய பிள்ளையார் கேட்டருளி நல்ல
இசையினையுடைய யாழ்ப்பெரும்பாணனாருக்கு ஏற்றபடியினாற் சிறப்புச் செய்து விரும்பி
உறையுநாளில்; அவர்பாடும்...மேவியபின் - அப்பிள்ளையார் பாடியருளுகின்ற
மேன்மையுடைய திருப்பதிகத்திசையினை யாழில் இட்டு வாசிக்கும் பேறுபெற்று
அவருடனே கூட உறைந்து இருந்தபின்; பானற்களத்தார்.....அடைந்தார் - நீலமலர்
போலும் நிறம் பொருந்திய கழுத்தினையுடைய இறைவரது திருநல்லூர்ப் பெருமணத்தில்
அவருடனே இறைவரது திருவடிகளை அடைந்தனர்.
 
     (வி-ரை) ஞானமுண்டார்.....நாளில் - இவ்வரலாறு முன்
ஆளுடையபிள்ளையாரது புராணத்துள் (2029 - 2037) விரிக்கப்பட்டுள்ளது.
 
     ஆனபடி - மரபுக்கும் அன்பிற்கும் இயைந்த வகையாக;
 
     அவர்பாடும்......மேவியபின் - (2037 - 2039) ஆளுடையபிள்ளையார் புராணம்
பார்க்க; உடனே மேவுதல் - பிள்ளையாரைக் கண்டு பணிந்து அவரது அருள்பெற்ற
நாள்முதலாக அவரது திருமணத்தில் உடனாக இறைவரது திருவடியடையும் வரை,
அவரைப் பிரியாது உடனிருக்கவும், அவரது திருப்பதிகங்களை அவ்வப்போதும்
அங்கங்கும் அவராணைப்படி யாழிலிட்டுச் சேவித்து வரவும் பேறுபெற்றதுவும் இங்கு
நினைவு கூர்க; ஆண்டு முன்னர் விரித்தமையின் இங்குச் சுட்டிய மட்டிற் சுருங்கக்
கூறினார்.
 
     பானற்களத்தார் - பானல் - நீலமலர்; நீலமலர்போன்ற கரிய கண்டம்.
 
     உடனே - ஆளுடையபிள்ளையாரும் அவரது பரிசனங்கள் முதலாகிய
எல்லவரும் கூடிய கூட்டத்துடனே, 3148- ம் பிறவும் பார்க்க.                  11