| வாட்டுந் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப் பாட்டுந் திகழ்திரு நாவலூ ராளி பணித்தனனே (87) |
திருத்தொண்டத்தொகைப் பாட்டு முதற்குறிப்பு |
| பணித்தநற் றொண்டத் தொகைமுதற் றில்லை யிலைமலிந்த வணித்திகழ் மும்மைத் திருநின்ற வம்பறா வார்கொண்டதோர் இணைத்திகழ் பொய்யடி மைக்கறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின் மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே (88) |
பலனருள் கவி |
| ஓடிடும் பஞ்சேந் திரிய மொடுக்கியென் னுள்வினைகள் வாடிடும் வண்ணநின் றெத்தவஞ் செய்தனன் வானினுள்ளோர் சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையிலுள்ள சேடர்தஞ் செல்வப் பெரும்புக ழந்தாதி செப்பிடவே (89) |
- திருத்தொண்டர் திருவந்தாதி. (முற்றிற்று) |
விரி |
மேல்வரும் வெள்ளானைச் சருக்க முழுமையும் 86 - ம் திருப்பாட்டின் விரியாகக் கொள்ளத்தக்கது; இச் சருக்க முடிவின் பொருட்டும், ஆசிரியர், காவிய நிலைபற்றித் தொடக்கத்துத் திருமலைச் சருக்கமும் இறுதியில் வெள்ளானைச் சருக்கமும் வைத்து முடித்ததன்பொருட்டும், அதனை ஈண்டு வைக்காது வேறுவைத்து உரை ஓதப்படுகின்றது. |
தொகை ;- அத்தன்மையுடைய ஆரூரனது அடிமைத் திறத்தினைக் கேட்டு மகிழ்ந்து வாழ்பவர்கள் திருவாரூரில் அம்மானுக்கு அன்புடையவராகுவர். |
அன்னவன் - முன்கூறிய அந்த என முன்னறி சுட்டு; அத்தன்மையாவன தில்லைவாழந்தணர் முதலாகத் திருநீலகண்டப் பாணனா ரீறாகக் கூறி வழிபடப்பட்ட திருத்தொண்டர்களுக்கெல்லாம் அடியவராய்ச், சடையனா ரிசைஞானியார் காதலராகிய தன்மை; அடிமை - அடிமை செய்யும் பண்பு; மனமொழி மெய்களால் வழிபட்டமுறை; அது தடுத்தாட்கொண்ட புராணத்துட் கூறப்பட்டது. (335 - 349); அடிமைத் திறங்கூறும் திருத்தொண்டத் தொகை; உவத்தல் - மகிழ்ந்து அவ்வாறே தாமும் அடியார்க்கு அடிமைகளாக ஒழுக அமைதல்; அன்பராவார் - சிவனுக்கு அன்பராந்தன்மை பெற்று வீடடையும் தகுதிபெறுவர். சிவனடியார்பாற் செலுத்தும் மனமே சிவன்பாலன்பினை விளைத்து அதுவே முத்தி சாதனமாம் என்பது சிவஞான நூல்களின் துணிவு; ஏகாரம் - தேற்றம். அம்மான் - இறைவர். |
வகை :- (86) வளரொளிப்பூண்.....கூட்டத்திலே - மேன்மேல் வளர்கின்ற ஒளியுடைய அணிகளையுடைய தேவர்களாலும் சென்றடைதற்கரிய வடகயிலை மலையின்கண் எழுந்தருளியுள்ள முழுமுதற் றலைவராகிய சிவபெருமானது திருக்கோயிலில் உள்ள அடியார் திருக்கூட்டத்தில்; மானவ.......புக்கவரை - மனித உடம்புடன் கூடிப்புகுந்திருப்பவர்களை; ஞான.....நாமறியோம் - ஞானத்திரு நம்பியாரூரரையும் சேரமான் பெருமாள் நாயனாரையும் அல்லாது வேறு எவரையும் நாம் அறியோம். |