ஞான ஆரூரர் - ஞானத்தையுடைய நம்பி ஆரூரர். ஞானம் - சிவஞானம்; இங்குச் சிவஞான வாழ்வுடைமை குறித்தது; ஆரூரையும் சேரரையும் என்க. எண்ணும்மைகள் தொக்கன; சேரர் - சேரமான் பெருமாள்; மானவ ஆக்கை - மனித உடம்பு; தவத்தோர் - அடியார்; சிவகணங்களாகிக் கயிலையில் இருப்பவர்; கயிலைக் கோன் - சிவபெருமான்; கூட்டம் - கயிலையின் திருக் கூட்டம்; சிவகணங்களின் கூட்டம்; இவ்விரு பெருமக்களும் இங்கு நின்றவாறே மனித உடம்புடன் முறையே யானைமீதும் குதிரைமீதும் திருக்கயிலைக்குச் சென்று சேர்ந்து அங்குக் கணநாதர்களாய் அடியார் கூட்டத்தினில் அமரும் வரலாறு மேல் வெள்ளானைச் சருக்கத்துட் பேசப்பெறும்; அச்சருக்கத்தை வேறாக வகுத்து இப் புராண காவியத்தை நிறைவாக்குதற்கு ஆதரவு நம்பியாண்டார் நம்பிகளருளிய இத்திருப்பாட்டேயாகும் என்க; வானவராலும் மருவற்கரிய - வானவர் பசுபுண்ணியங்கள் செய்து போக பூமியாகிய, மீண்டும் பிறவிக் கேதுவாகிய, சுவர்க்கத்திற் புக உரியவரேயன்றிச், சிவனடியார் போலச் சிவபுண்ணியப் பேற்றினாற் பிறவா நெறி பெற்றுச் சிவனுலகம் புக உரியரல்லர் என்பது ஞானநூற் றுணிபு; கோன் - முழுமுதற்றலைவர்; இப்பாட்டின் விரிவு மேல்வருஞ் சருக்கமாம். |
(87) இப்பாட்டினால் திருத்தொண்டத் தொகையினுள் தனியடியார்களும் தொகையடியார்களும் இத்துணையாவர் என்று நம்பியாண்டார் நம்பிகள் வகுத்துக் காட்டியருளினர்; கூட்டமொன்பானோடு.....எழுபத்திரண்டாம் - திருக்கூட்டத்தின் வரும் அடியார்களின் வகை ஒன்பதாம்; (அதனோடு), அறுபத்து மூன்றுபேர் தனியடியார்களாக, இவ்வாறு பெருந்தவத்தினை ஈட்டும் அடியார்கள் எழுபத்திரண்டாவர் (என்று); திகழ்திரு நாவலூராளி - விளங்கும் திருநாவலூர் நம்பியானவர்; வினையை....பாட்டும் - வினையைப் போக்கும் தவத்தை தரும் திருத்தொண்டத் தொகையினிற் பதினொன்றாக வகுத்த பாட்டுக்களையும்; பணித்தனனே - அமைவுபடுத்தினரே; |
கூட்டமொன்பானோடு - திருக்கூட்டம் - தொகையடியார்களாகப் போற்றப்படும் ஒன்பதனோடு; இவர்கள் தில்லைவாழந்தணர்கள், பொய்யடிமையில்லாத புலவர், “பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்குமடியேன்” என்ற திருப்பாட்டிற் போற்றப்பட்ட ஏழு திறத்தினர் ஆக ஒன்பதினமர். தனிப்பெயர் அறுபத்து மூன்று - திருநீலகண்டக் குயவனார் முதலாகத் திருநீலகண்ட யாழ்ப்பாண ரீறாகத் தனித்தனி அடியேன் என்று போற்றப்பட்ட அறுபதின்மருடன், அரனடியே அடைந்திட்ட சடையன் (1), இசைஞானி (2), காதலன் றிருநாவலூர்க்கோ னன்னவனா மாரூரன் (3) என்ற மூவரும் சேர்த்து அறுபத்து மூவராவர்; ஈட்டும் பெருந்தவத்தோர் - மீட்டிய பெருந்தவத்தவர்கள்; தவம் - சிவபூசைப்பயன்; வினையை....திருத்தொண்டத் தொகை - திருத்தொண்டத் தொகையின் பயனாவது வினையை வீட்டுகின்ற தவநெறியிற் செலுத்துவதாம். வகைப்பாட்டும் - வகைப்படுத்தி ஓதியபாட்டுக்களையும்; திருநாவலூராளி - நம்பியாரூரர். |
(88) இப்பாட்டினால் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை நியமமாகப் பாராயணஞ் செய்வோர்க்கு அத்திருப்பாட்டுக்கள் முறை பிறழாது நினைவுக்கு வருதற்கு உதவியாக அவற்றின் முதற் குறிப்புக்களைக் கோர்த்து ஒரு கவியாக்கிக் கருணையினாலே தந்தருளினார் நம்பியாண்டார் நம்பிகள். இம்மரபு பிறபதிகங்களுக்கும் தேவாரப் பள்ளிக்கூடங்களில் கையாளப்படுகின்றது. |
பணித்த நற்றொண்டத்தொகை முதல் - முன்கூறிய அவ்வாறு திருநாவலூராளி அருளிய வினைவீட்டும் தவத் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகப் பாட்டுக்களின் |