உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
பதின்மூன்றாவது |
வெள்ளானைச் சருக்கம் _ _ _ _ _ |
4229. | மூல மான திருத்தொண்டத் தொகைக்கு முதல்வ ராயிந்த ஞால முய்ய வெழுந்தருளு நம்பி தம்பி ரான்றோழர் காலை மலர்ச்செங் கமலக்கட் கழறிற் றறிவா ருடன்கூட ஆல முண்டார் திருக்கயிலை யணைந்த தறிந்த படியுரைப்பாம். 1 |
(இ-ள்) மூலமான....தம்பிரான்றோழர் - திருத்தொண்டர் சரிதங்களைக் கூறும் இந்நூலுக்கு மூல நூலாகிய (முதனூல்) திருத்தொண்டத்தொகை அருளிச் செய்வதற்குரிமையுடைய முதல்வராக இந்த நிலவுலகம் உய்யும் பொருட்டே இங்கு எழுந்தருளி வந்த நம்பிகளாகிய தம்பிரான் றோழர்; காலை...கூட - காலையில் மலரும் தன்மைத்தாகிய செந்தாமரைபோன்ற கண்களையுடைய கழறிற்றறிவார் நாயனாருடன்கூட; ஆல முண்டார்.....உரைப்பாம் -விடத்தை உண்டருளிய இறைவரது திருக்கயிலையின் கண் அணைந்த வரலாற்றினை அறிந்தவாறு சொல்வோம். |
(வி-ரை) மூலமான - இப்புராணத்துக்கு முதனூலாகிய. மூலம் - மூலநூல்; முதனூல். மூலம் - பிறிதோர்நூலினின்றும் எவ்வாற்றானும் எடுத்துக் கொள்ளப்படாது உண்டாகியது; திருத்தொண்டத் தொகைப் பதிகத்தினையே முதனூலாகவும், திருவந்தாதியினை வழி நூலாகவும் கொண்ட சார்பு நூலாக இப்புராணம் போந்ததென்பது முன் திருமலைச் சருக்கத்துள் (47 - 48- 49) உரைக்கப்பட்டது; கடைப்பிடிக்க. இதனாலே இப்புராணம் மொழி பெயர்ப்புநூல் என்ற போலியுரைகாரர் கூற்றும் மறுக்கப்பட்டதும் காண்க. |
முதல்வர் - ஆசிரியர். செய்தவர்; முதல்வரோ டொப்பாந் தன்மையுடையவர் என்ற குறிப்பும் காண்க. முன் உபமன்னிய முனிவர் கூற்றும் (29) காண்க. |
ஞாலமுய்ய எழுந்தருளும் நம்பி - “மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப், போதுவார்” (35) என்று தொடக்கத்துக் கூறியதனைப் புராண முடிபில் இங்கு நினைவு கூர்ந்து மனத்துள் வைத்தற் பொருட்டு இவ்வாற்றாற் கூறினார். மூலமான......முதல்வர் - என்றதும் “தீதிலாத்திருத் தொண்டத் தொகைதர” என்ற கருத்தைச் சுட்டி நிற்றல் காண்க. |
காலைமலர்ச் செங்கமலக் கண் - காலையில் மலருந் மலராகிய செங்கமலம்; இடையறாத கண்ணோட்டம் பெரிதும் வேண்டி வரம்பெற்ற குறிப்புப் பெறக்கூறியது; “திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேன்” என்றபடி |