| ருந் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்” (3911) என்றதும், ஆண்டுரைத்தவையும் இங்கு நினைவு கூர்தற்பாலன. (இப்போது நகரம் கோயிலுக்கு வடக்கில் உள்ளது. காலாந்தரத்தின் மாறுதல்.) இவ்வீதியினைக் கடந்து சென்றால் முதலை பிள்ளையை உண்ட மடு என்னும் ஏரியும், அதனைக்கடந்து சென்றால் திருக்கோயிலும் அடைய உள்ளன. பழைய இந்நிலைகளை மனம் கொண்டாலன்றி மேல்வரும் சரித நிகழ்ச்சிகள் (4237 - 4238) அமைவுபடா. |
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் - அவ்வீதியில் எதிர் எதிராக இரண்டு செல்வமனைகள் ஒன்று போன்ற செழிப்புடன் விளங்க அவற்றுள். |
நிகழ்மங்கல....எழுதலும் - இருமனைகளும் ஒன்றுபோலச் செல்வமுடன் விளங்க, அவற்றுள் அவ் வொரு காலத்தில் நிகழ்ச்சிகள் மாறுபட்டன என்க; இவ்வாறு தோற்றமும் நிகழ்ச்சியும் மாறுபாடு படக் கண்டநிலை நம்பிகள் அவற்றைத் திருவுளங் கொள்ளக் காரணமாயிற்று; ஆயின் சிவானந்தப் பெருவாழ்விற் றிளைத்தவாறே சிவயோக வாழ்வுடன் உலகில் பரமே பார்த்திருக்கும் எந்தம் பெருமக்கள் இவ்வாறு வரும் உலக நிகழ்ச்சிகளில் மனம் செலுத்துவரோ? எனின், அற்றன்று; பின் விளைவு கருதித் திருவருள் இவர்களது திருவுள்ளத்துள் நின்று இவ்வாறு செலுத்தியருளும் என்பதாம்; திருமருகலில் கும்பிடச் சென்ற ஆளுடைய பிள்ளையார் வழியில் வணிகப் பெண்ணின் அழுகை கேட்டுச் சென்று வினவி அருள்புரிந்த வரலாறும் ஆண்டுரைத்தவையும் இங்கு நினைவுகூர்தற்பாலன; அவ்வரலாற்றிற் போலவே, இங்கும், மகவிழந்த மறையோனும் மனைவியும் சிறந்த சிவத்தொண்டர்களெனவும், நம்பிகள்பால் மிக்க அன்புபூண்டடொழுகியவர்கள் எனவும் “முன்னே கண்டிறைஞ்ச - வந்து” (4235) “முன்னே வணங்க முயல்கின்றோம்; அன்பு பழுதாகாம லெழுந்தருளப் பெற்றோம்” (4236) என்றவற்றால் ஆசிரியர் அறிவிக்கும் திறமும் காண்க. திருவருள் நிறைவுபெற்ற பெரியோர் செய்கையும் திருவருள் செலுத்துமாறுகளையும் அளக்க எவரே வல்லார்? மங்கலவியங்கள் அறையும் ஒலி ஒன்றில்; ஒன்றில் அழுகை ஒலி - ஒலிகளின் வேறுபாட்டையும் மாறுபாட்டையும் குறிக்க, “ஒன்றில் ஒன்றில்” என்ற சொற்களை இடையிட்டுச் சேய்மைப்படப் பிரித்த கவிநயம் கண்டு கொள்க; மங்கலத்தையும் மாறுபட்ட பண்பையும் புலப்படக் காண நின்றமையால் இரண்டனையும் ஒலி என்றார். அன்றியும் சிவானந்தத்துட் டிளைக்கும் பெரியோர் நன்மை தீமை இரண்டனையும் ஒப்ப நாடுவர் என்ற குறிப்பும் காண்க. ஆயின் இம்மாறுபாடு கருதி வினவியதென்னை எனின், உலகுபகாரமாக எழுந்த திருவருட் குறிப்பாகுமென்க. |
ஆங்கு உறையும் மறையோர்களை - ஆங்கு - அவ்விடத்து; முன்னர்க் கூறிய மங்கலவியங்கள் அறையும் ஒலி எழுந்த மனைப்பக்கம், சேய்மைச் சுட்டினாற் சுட்டப்படுவது அதுவே யாதலின்; மேல்வரும்பாட்டில், அவர்கள், கலியாணம் இந்தமனை என்று அதனையே அண்மைச் சுட்டினாற் கூறுதல் காண்க. மக்கள் குழுமிக்கூடும் இடம் அதுவாகும் இயல்பும் குறிக்க. |
இரண்டும் உடனே - மங்கலமும் அமங்கலமுமாக மாறுபட்ட இரண்டும்; உடனே - ஒரே காலத்து ஒரே பக்கமாக. 5 |
| 4234. | அந்த ணாளர் வணங்கி“யரும் புதல்வ ரிருவ; ரையாண்டு வந்த பிராயத் தினர்;குளித்த மடுவின் முதலை யொருமகவை முந்த விழுங்கப் பிழைத்தவனை முந்நூ லணியுங் கலியாணம் இந்த மனை;மற் றந்தமனை யிழந்தா ரழுகை;” யென்றுரைத்தார். 6 |