பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்608

2
 
     கழல் தொழ - இறைவரது திருவடிகளைக் கண்டு தொழும்பொருட்டு; விரைந்து
- விரைவு ஆர்வங் குறித்தது. கழல் வீழ்ந்து - என்பது பாடமாயின், பெரிய தேவரை
வணங்கி என்க.
 
     விரைந்தெய்தி - வந்தித்துப் - போற்றிட என்று மேல்வரும் பாட்டுடன்
முடிக்க.
 
     நின்மலர்க்கழல் - நிரைமலர்க்கழல் - என்பனவும் பாடங்கள்.     44
 
     4273. (வி-ரை) போற்றிட - துதித்து நிற்க.
 
     புதுமதி - தேய்மதியின்பின் புதிதின் முறைத்து விரியநின்ற ஒற்றைக்கலையுடைய
மதி; பிறை.
 
     அலைகின்ற கங்கை - அலைதற்கிடமாகிய கங்கை.
 
     திருமுறுவலின் கதிர்காட்டி - திருப் புன்முறுவலின் இள ஒளியினைக் காட்டி;
முறுவல் - சிறுநகை; வரவு அங்கீகரித்த நிலைகாட்டும் மெய்ப்பாடு. இறைவரது
முறுவலே புரமெரித்தது; இங்கு அவ்வாறன்றி அருட்புன்முறுவலாயிற்று என்பது;
"குமிண்சிரிப்பும்" - "சிரித்த முகம் கண்ட" (தேவா)
 
     "நாம் அழையாமை நீ இங்கு எய்தியதென்னை?" - இஃது இறைவர்
சேரலனாரை நோக்கி வினாவியருளியது.                               45
 
4274. அரச ரஞ்சலி கூப்பிநின் "றடியனே னாரூரர் கழல்போற்றிப்
புரசை யானைமுன் சேவித்து வந்தனன்; பொழியுநின் கருணைத்தெண்
டிரைசெய்வெள்ளமுன்கொடுவந்து புகுத்தலிற்றிருமுன்பு வரப்பெற்றேன்;
விரைசெய் கொன்றைசேர் வேணியா! யினியொரு விண்ணப்பமுள தென்று,
 
4275. "பெருகு வேதமு முனிவருந் துதிப்பரும் பெருமையா! யுனையன்பாற்
றிருவு லாப்புறம் பாடினேன்; திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்
மருவுபாசத்தையகன்றிடவன்றொண்டர்கூட்டம்வைத் தா"யென்ன,
அருளு மீசருஞ்"சொல்லுக" வென்றன; ரன்பருங் கேட்பித்தார்.

 
     4274. (இ-ள்) அரசர் அஞ்சலி கூப்பிநின்று - சேரனார் சிரமேற் கைகூப்பி
நின்று; அடியனேன்.....வந்தனன் - அடியேன் நம்பியாரூரருடைய திருவடிகளைப்
போற்றிக்கொண்டு அவர் அருளினால் ஏறிவந்த புரசையானையின் முன்னே அவரைச்
சேவித்துக்கொண்டு வந்தேன்; பொழியுநின்....வரப்பெற்றேன் - தேவரீரது மிக்குப்
பொழிகின்ற கருணையாகிய தெள்ளிய அலையினையுடைய பெருவெள்ளமானது
அடியேனை உந்திக்கொண்டுவந்து இங்கே புகுத்தியதனாலே தேவரீரது திருமுன்பு வந்து
சேரும் பேறு பெற்றேன்; விரைசெய்....என்று - மணமுடைய கொன்றைமலர்
மாலையினை யணிந்த சடையினையுடைய பெருமானே! மேலும் ஒரு விண்ணப்பம்
உளது" என்று கூறி,                                                 46
 
     4275. (இ-ள்) பெருகும்....பெருமையாய்! - பெருகுகின்ற வேதங்களும்
முனிவர்களும் துதித்தற்கரிய பெருமையுடையவரே!; உனை.....வைத்தாய் என்ன -
அன்பினாலே தேவரீரைத் திருவுலாப்புறப் பாட்டுப் பாடினேன்; அதனை அருள் செய்து
திருச்செவி சாத்திக் கேட்டருள வேண்டும்; பொருந்திய பாசத்தினின்று நீங்கிட
வன்றொண்டரது கூட்டத்தினைச் சாரவைத்தவரே! என்று விண்ணப்பிக்க;
அருளும்....என்றனர் - அருளே புரிகின்ற பெருமானும் சொல்லுக என்றருளினர்;
அன்பரும் கேட்பித்தார் - அன்பராகிய சேரனாரும் பாடி அவரைக் கேட்பித்தனர்.
 
     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு பொருள்மேனின்று ஒருமுடிபு
கொண்டன.