பக்கம் எண் :

பெரியபுராணம்609

 
     4274. (வி-ரை) அடியனேன்...வரப்பெற்றேன் - புன்முறுவல்பூத்து இங்கு நாம்
அழையாமை நீ வந்ததென்? என்று வினவியருளியதற்குச் சேரனார் கூறிய விடை;
முதலாவது, அடியேன் இங்கு வரக்கருதி வரவில்லை; நம்பியாரூரைப் பிறிவின்றிச்
சேவித்துவருதலையே கருத்தாகக்கொண்டு யானையின்முன் அவரைச்
சேவித்துக்கொண்டே வந்தனன்; அச்சேவை அடியேனைத் தேவரீரது திருவணுக்கன்
றிருவாயில்வரை கொண்டுவந்து விட்டது; இரண்டாவது, இனி, அதன்மேல் இங்குத்
திருமுன்பு வந்த செயலும் அடியேனது செயலாவதன்று; தேவரீரது அருளிப்பாடு
என்னும் கருணைப் பெருவெள்ளம் என்னை உந்திக்கொண்டு வந்து திருமுன்பு
புகுத்தியது. இது வழியும் அடியேன் இங்கு வரவேண்டும் என்ற முனைப்பின்றித்
திருவருட் செயலாகவே வரப்பெற்றேன் என்றதாம்; இஃது அரசனாரது சொற்பெரு
வன்மையும், தற்போதமிழந்த பேரடிமைத் திறமும் ஆம்; இவை கண்டு பின்பற்றி
உலகம் உய்யத்தக்கது. புரசை - யானைக் கழுத்திடு கயிறு. "உடையா னடியா ரடியா
ருடன் போய்ப், படையா ரழன்மேனி பதிசென்று புக்கேன், கடையார நின்றவர்
கண்டறிவிப்ப, வுடையான் வருகென வோலவென் றானே" திருமந் II. 211.
 
     தெள் - திரை - செய் - வெள்ளம் - கொடுவந்து புகுத்தலின் -
அலையினாலும், பெருவெள்ளமாம் தன்மையாலும், அதனகப்பட்டுப் புகுத்தப்பெற்றேன்
என்றது அவரது திருவருளின்றி நிகழ்ச்சி யொன்றுமில்லை என்றபடி. இறைவர்
அருளின்படி நந்தியெம்பெருமான் "வானவர்க்கு அருளிப்பாடு" என்று அழைத்தருளிய
செயலைக் குறித்தது.
 
     கொன்றைசேர் வேணியாய் - சிவனுக்குரிய சிறப்பாகிய கொன்றைத்
திருவடையாள மாலை. நியதியாய்த் தாம் வழிபட்ட திருவஞ்சைக்களத்தினின்றும்
வழிபட்டுப் போந்தமையால் அது அப்பதியின் தல மரமாதலும் குறிப்பு.
 
     புகுதலின் - என்பது பாடம்.                                     

46
 

     4275. (வி-ரை) பெருகும்.....துதிப்பரும் பெருமையாய் - தேவரீரது பெருமை
துதித்தற்கும் அரியது. உமது வாய்மொழியாகிய பெரிய வேதங்களாலும், உம்மையே
உணர்ந்து உள்ளந் தழுவிய பெரு முனிவர்களாலும் துதித்தற்கரியது; ஆயின்
வேறுயாவர் துதிக்க வல்லார்?
 
     அன்பால் உனைத் திருவுலாப்புறம் பாடினேன் - அவ்வாறாதல் அறிந்துவைத்தும், திருவுலாப்புறம் பாடி உன்னைத் துதித்தேன். என்னை? எனின்,
அஃது அன்பின் றிறத்தலாகியதன்றி நான் துதிப்பேன் என்ற எண்ணத்தலாகியதன்று
என்பது.
 
     திருவுலாப்புறம் - புறப்பாட்டின் வகையுள் ஒன்றாகிய திருவுலா என்னும் நூல்.
புறத்திணைகள் பன்னிரண்டனுள், புறப்புறம் என்னும் பாடாண் திணையுள் வருவது.
அதன் துறைகள் 47-ல் கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்ற
துறையுள் முற்பகுக்கப்பட்டது. இதுவே முதலிற் பாடப்பட்டதாதலின் ஆதியுலா
என்றும், சிவஞானமே கருத்தாகப் பதிபோதத்தால் கயிலை நாயகர்மேல்
அருளப்பட்டதாதலின் திருக்கயிலாய ஞானவுலா என்றும், தெய்வத்தன்மை
வாய்ந்ததாதலின் தெய்வவுலா என்றும் பலவாறும் விதந்து போற்றப்படுவது.
 
     திருச்செவி சாத்திடப் பெறவேண்டும் - கேட்டருளுதல் வேண்டும்.
கேட்டலாவது அருள்புரிதல்.
     மருவு.....வைத்தாய் - மருவுபாசம் - ஆன்மாவுடன் சகசமாயுள்ள
ஆணவமலமும் வாசனாமலமும்; வன்றொண்டர் கூட்டம் வைத்தாய் - முன்னர்
அவரை நினைப்பித்துச் சாரச்செய்த திருவருட்செயல் (3791); மருவுபாசத்தை
அகன்றிட
என்றது