பக்கம் எண் :

பெரியபுராணம்615

 
என்றும் கூறியருளினார். இயல்பு என்பது ஆகுபெயராய்ச் சரியை முதலிய
சாதனங்களை உணர்த்தி நின்றது. ஆல், ஓடு உருபின் பொருட்டு; ஒன்று -
சிவபரம்பொருள்; உள்ளம் - உயிர்; சாதி ஒருமை; ஆணவ மலத்தால் அறி விச்சை
செயல்கள் மறைப்புண்டு இலதென்றற் குரித்தாய், பின் சகலத்தில் ஏழு பிறப்பின்
முடங்கிக் கிடந்த உயிர் என்பது தோன்ற இழிவு சிறப்பும்மை தந்து உள்ளமும்
என்றார். காதலித்தென இச்சை வியாபரித்தல் கூறவே, இனம் பற்றி அறிவும்
தொழில்களும் வியாபரித்தலும் பெறப்படும். பெறவே அவை மூன்றும் ஏகமாய
மெய்ப்பொருள் ஒன்றனையே விடயித்து நிற்கும் நிலையே ஓங்குநிலை
என்றவாறாயிற்று. அவர் - பகுதிப் பொருள் விகுதி; "சிவனவன்" என்புழிப் போல.
இனி, மன்றுளாரும் அடியாரும் ஆகிய அவர் எனக்கொண்டு ஆண்டானும்
அடியாருமாகிய அவ்விரு திறத்தார் புகழ் என்றலும் ஒன்று. இறைமைக் குணங்கள்
முழுவதும் உடைய இறைவன் புகழும் அவன் அடியார் புகழுமே "பொருள் சேர்
புகழாம்"
ஆதலின் வான்புகழ் என்றார்.
 
     "இன்றிச் சமயத்தி னல்லதுமற் றேழையுடன், ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் -
இன்றிங்கே, அங்க முயிர்பெறவே பாடு மடியவரார், எங்குமிலைகண்டா யிது" (65)
என்பது திருக்களிற்றுப்படி; இவ்வாறு ஆசிரியர் எடுத்துக் கொண்ட நூலை முடித்துக்
காட்டிய பொருளுரை மங்கலம் நின்று நிலாவுக உலகெலாம். - இவை ஸ்ரீமத்
முத்துக்குமார முனிவர் பெருமான் அருளிய குறிப்புக்களாகும்.
 
     என்றும் இன்பம் பெருகு மியல்பினால் - சரியை முதலிய மூன்று
சாதனங்களினால்; இயல்பினாற் காதலித்து - என்று கூட்டுக.
 
     ஒன்று - சிவம்; உள்ளம் - உயிர்; உள்ளம் - காதலித்து - ஓங்கிட - என்க.
காதலித்து - காதலித்ததனால். "ஏகமாய் நின்றே யிணையடிக ளொன்றுரை" (போதம்).
 
     ஓங்குதல் - ஞானம் பெறும் வழியில் நிற்றல். "கண்ணுக்குக் காட்டுமுளம் போல
" (போதம்).
 
     இவை "உலகெலாம்" என்ற முதற் பாட்டிற் கூறிய சாதனங்களின் முற்றுப்
பேற்றினை உணர்த்தி முடித்தல் காண்க. ஒன்று - "அங்கையாற் காளாமது" (அற்.அ -
11) என்ற அம்மையார் வாக்கின் படியுமாம்.
 
     மன்றுளார் - "அம்பலத்தாடுவான்" (1).
     புகழ் நின்றது - இப்புராணத்தினுட் கூறிய புகழ்கள் நிலைத்து வாழிய என்பதும்
குறிப்பு. வான் - பெருமை.
 
     நின்றது எங்கும் நிலவி உலகெலாம் - காலத்தாலும் இடத்தாலும் முற்றிய
நிலைபேறு குறித்தது. உலகெலா முணர்ந்தோதற்கரியவன் - என்று தோற்று
முறையில் விரிந்த இந்நூல் எங்கு நிலவியுலகெலாம் - என்று ஒடுக்க முறையில்
முடிவுறுதல் காண்க.
 
     இவ்வாறு முத லிடை கடை என்ற மூன்றிடங்களிலும் வைத்த "உலகெலாம்" என்ற
மும் மங்கலங்களும் வாழ்த்துக்களும் ஒரே யாப்பில் அமைந்த தெய்வக் கவி
அமைதியும் கண்டு கொள்க.
 
     (குறிப்பு :- இடைச் செருகல்களாகிய 28 பாடல்களை நீக்கினால் "சோதி முத்து"
என்றது புராணத்தின் நடுவில் அமைவது காணலாம்.)                      53
 
     வெள்ளானைச் சருக்கம் - சரிதச் சுருக்கம் :- திருவாரூர் நம்பிகள்
சேரமானாரிடம் விடைபெற்றுத் திருமுருகன் பூண்டி வழியாகக் கொங்குநாடு கடந்து
திருவாரூரை அடைந்து பலநாள் இறைவரை வழிபட்டிருந்தனர்.