பக்கம் எண் :

பெரியபுராணம்7

     விழையும் இன்பம் - விழைதல் - விரும்புதல்; விரும்பத்தக்க என்றபடி;
நூல்களுள் விதித்தவாறே அமைந்தொழுகித் துய்க்கப்படும் நிலை குறித்தது.
 
     விளங்குவன - இன்பம் மனநிகழ்ச்சி யாதலின் அது புறத்தும் காணப்படும்படி
உள்ள அடையாளங்கள் வெளிப்படுவன.
 

     பக்கம் - மனைகளின் பக்கமும், நகரின் பக்கமும்; சாலை - அறச்சாலைகள்.
 

     சட்டறங்கள் - செப்பமாகிய அறங்கள்; சட்ட அறங்கள் என்றது சட்டறங்கள்
என நின்றது; சட்ட என்பது “செப்பப் பொருட்டாயதோர் அகரவீற் றிடைச் சொல்”
என்று “சட்ட வினியுளது சத்தே காண்” (போதம். 9 - 2) என்ற விடத்துரைத்தனர்
எமது மாதவச் சிவஞான முனிவர். பயிலுதல் - வழங்குதல்; பல்குதல் - மிகுதல்.
“சட்டவிக் கதவம்”, “சட்டகலை யெட்டு”, “சட்ட நேர்பட”.
 
     அன்பர் - சிவன்பா லன்புடைய அடியார்கள்; அன்பர்கள் வாழும் இடங்களே
மடங்கள் எனப்படும்.
 

     சைவ மெய்ம்மை சாற்றுவன - மெய்ம்மைகள் சாற்றப்படுவன என்று
பிறவினையாகப் பொருள் கொள்க. சாற்றுதலாவது விதிவழி உபதேசித்தலும்,
ஒழுக்கத்தால் அறிவித்தலுமாம். சைவநெறியே வீட்டு நெறியைக் காட்டவல்ல தென்பது
முடித்துக் காட்டப்பட்டவாறு காண்க. “வீடு காட் டுந்நெறி, மண்ணுலாவுந் நெறி” (பிள் -
தேவா - கொல்லி - திருந்து தேவன்குடி - 5) நகரச் சிறப்புக் கூறுமாற்றால் சைவத்தின்
மேனிலை காட்டுவது உட்குறிப்பு; “கருத்தின் பயனா மெழுத்தஞ்சும்...வேதப்பயனாம்
சைவமும்போல்” (1214) என்று இவ்வாறே உவமை முகத்தால் நகரச்சிறப்பினைக் கூறும்
வகையால் சைவச் சிறப்புக் கூறிய திறம் இங்கு நினைவு கூர்தற்பாலது. விளங்குவன -
பல்குவன - சாற்றுவன போல இடங்கடொறும் நிதியம் துவன்றுவன என்றலுமாம்.

 

     தொக்கவளங் கொள் இடங்கள் - தொகுதியாகச் செறிந்த வளங்களைச்
சேமித்து கொண்ட வைப்பு இடங்கள். வளங்கள் - விளைபொருள்கள்; நிதியம் -
அவற்றாற் பெற்ற மணி, பொன், வெள்ளி முதலியவை.
     அடங்க - நிறைய; துவன்றுவன - விளங்குவன. தோன்றுவன.
 
     விளையும் இன்பம் - பயினெட்டறங்கள் - பயிலுவன - அணிசெய்
மடங்கள் - சைவமேன்மை
- என்பனவும் பாடங்கள்.                    3
 
3751.
 
வேத நெறியின் முறைபிறழா மிக்க வொழுக்கந் தலைநின்ற
சாதி நான்கு நிலைதழைக்குந் தன்மைத் தாகித் தடைமதில்சூழ்
சூத வகுள சரளநிரை துதையுஞ் சோலை வளநகர்தான்
‘கோதை யரசர் மகோதை’யெனக் குலவு பெயரு முடைத்துலகில்.      4

 

     (இ-ள்) வேத....தன்மைத்தாகி - வேதங்களின் விதித்த நெறியினது
முறைகளின்றும் வழுவாத மிகுந்த நல்லொழுக்கத்திலே சிறந்த நான்கு சாதிகளும்
தத்தம் நிலைகளில் நிலைத்து ஓங்கும் தன்மையை உடையதாகி; தடமதில்சூழ்...நகர்தான்
- பெரிய மதில் சூழ்ந்த மா - மகிழ் - சரளம் முதலிய மரங்களின் வரிசை நெருங்கிய
சோலைகள் சூழ்ந்த வளப்பமுடைய அந்நகரம்; கோதை அரசர்....உலகில் - உலகத்தில்
கோதை எனப்படும் சேர அரசர்கள் ஆளும் தலைநகராகிய மகோதை என்ற
விளக்கமாகிய பெயரும் உடையது.
 
     (வி-ரை) நகர்தான் - தன்மைத்தாகிப் - பெயரும் உடைத்து - என்று
கூட்டுக.