வேதநெறியின்.....சாதி நான்கு தன்மை - அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன; இவையும், இவற்றின் ஒழுக்கமும், நிலைபேறும் வேதங்களுள் விதிக்கப்படுவன; நகரத்தின் நன்னிலைக்கு இவை இன்றியமையாது வேண்டப்படுவன; இவை பற்றி இந்நாளில் மாறுபட்ட கருத்துக்கள் பல பரவி மக்கட் கூட்டத்தை அலைக்கின்றன; எவ்வாற்றானும் ஓரோர் வகையால் சாதிகளும், அவற்றின் உரிய நல் ஒழுக்கங்களின் வழுவாத நிலைபேறும் சமூக நல்வாழ்வுக்கு இன்றியமையாதன என்பது அறிவோர் கருத்து; இப் பாகுபாடுகள் பிறழ்ந்த நிலையே இந்நாளில் உலக முழுதும் காணும் அல்லல்களுக்குக் காரணமாவது என்பது ஊன்றிப் பார்ப்போர்க்கு விளங்காமலிராது. ஆசிரியர் இதனைப் பல விடத்தும் வற்புறுத்திக் காட்டியருளுதல் காண்க; நெறியின் முறைபிறழா என்றும், மிக்க ஒழுக்கம் என்றும், நிலைதழைக்கும் என்றும் கூறியவாற்றால் இவற்றால் மாறுபட்ட பூசல்களுக்கும் அல்லல்களுக்கும் இடமின்மையும் உடன் கூறியபடியும் கண்டுகொள்க. தழைக்கும் என்றதனால் சாதிகள் எல்லாவற்றுக்கும் உள்ள ஆக்கப்பாடும் செழிப்பும் அறிவித்தபடியும் காண்க. |
சரளம் - நீண்ட இலைகளையுடைய தேவதாரு வகையுட்பட்டதொரு பெருமரம். |
| கோதை அரசர் - சேரமரபின் அரசர்கள். |
மகோதை - தலைநகரின் பெயர்; பெயரும் - முன்னர்க்கூறிய கொடுங்கோளூர் என்ற பெயரேயன்றி இதுவும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை “கடலங்கரைமேன் மகோதை” (தேவா). அரசர் மகோதை - ஆறாம் வேற்றுமைத் தொகை. |
சோலை வள நகர்தான் - இவ்வழகிய காட்சி இன்றும் சிறப்பாய்க் கண்டனுபவிக்க வுள்ளது. 4 |
| 3752. | முருகு விரியு மலர்ச்சோலை மூதூ ரதன்கண் முறைமரபின் அருகி யழியுங் கலிநீக்கி யறங்கொள் சைவத் திறந்தழைப்பத் திருகு சினவெங் களியானைச் சேரர் குலமு முலகுஞ்செய் பெருகு தவத்தா லரனருளாற் பிறந்தார் பெருமாக் கோதையார். 5 |
(இ-ள்) முருகு....அதன்கண் - மணம் வீசும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த பழையஅந்நகரத்தில்; முறைமரபின்....திறம்தழைப்ப - சிறுகி அழிவு செய்யும் கலியினை, விதிமுறை மரபு வழிவரும் ஒழுக்கத்தினாலே நீக்கி அறத்தினை நாட்டும் சைவத்திறம் தழைத்தோங்கும்படி; திருகு...தவத்தால் - மாறுபட்ட கோபமிகுந்த மதமுடைய யானைப் படையினையுடைய சேரர் குலமும் உலகமும் செய்த பெருந்தவத்தினாலே; அரனருளால்...பெருமாக் கோதையார் - சிவனருளாலே பெருமாக் கோதையார் என்பவர் அவதரித்தனர். |
(வி-ரை) அருகி அழியும் கலி - அருகச் செய்து அழிவிக்கும் கலி என்க; அழியும் - பிறவினைப் பொருளில் வந்தது; கலி - தீநெறியின் விளைவு - “கலியைவாராமே செற்றார்” (தேவா). முருகு - மணம்; “முருகலர் தாமரை”. |
முறைமரபின் - நீக்கி - என்க; முறை மரபு - வேத நூன்முறை ஒழுக்கம்; மரபின் - மரபினால். |
அறங்கொள் சைவத்திறம் - அறம் வளரப் பாவம்(கலி) தேயும்; ஆதலின் அவ்வறத்தினை மேற்கொண்டு பெருக்கும் சைவத்திறம்; ஈண்டுக்குறித்த அறம் சிவநெறியாகிய அறம். |
யானைச் சேரர்குலம் - யானை - யானைப் படை; “வேழ முடைத்து மலைநாடு” என்றபடி யானைகள் மிகுந்த மலைநாட்டினை ஆளும் சேரர் குலம் என்றலுமாம்; |