பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)8

     வேதநெறியின்.....சாதி நான்கு தன்மை - அந்தணர், அரசர், வணிகர்,
வேளாளர் என்பன; இவையும், இவற்றின் ஒழுக்கமும், நிலைபேறும் வேதங்களுள்
விதிக்கப்படுவன; நகரத்தின் நன்னிலைக்கு இவை இன்றியமையாது வேண்டப்படுவன;
இவை பற்றி இந்நாளில் மாறுபட்ட கருத்துக்கள் பல பரவி மக்கட் கூட்டத்தை
அலைக்கின்றன; எவ்வாற்றானும் ஓரோர் வகையால் சாதிகளும், அவற்றின் உரிய நல்
ஒழுக்கங்களின் வழுவாத நிலைபேறும் சமூக நல்வாழ்வுக்கு இன்றியமையாதன என்பது
அறிவோர் கருத்து; இப் பாகுபாடுகள் பிறழ்ந்த நிலையே இந்நாளில் உலக முழுதும்
காணும் அல்லல்களுக்குக் காரணமாவது என்பது ஊன்றிப் பார்ப்போர்க்கு
விளங்காமலிராது. ஆசிரியர் இதனைப் பல விடத்தும் வற்புறுத்திக் காட்டியருளுதல்
காண்க; நெறியின் முறைபிறழா என்றும், மிக்க ஒழுக்கம் என்றும், நிலைதழைக்கும்
என்றும் கூறியவாற்றால் இவற்றால் மாறுபட்ட பூசல்களுக்கும் அல்லல்களுக்கும்
இடமின்மையும் உடன் கூறியபடியும் கண்டுகொள்க. தழைக்கும் என்றதனால் சாதிகள்
எல்லாவற்றுக்கும் உள்ள ஆக்கப்பாடும் செழிப்பும் அறிவித்தபடியும் காண்க.
 
     சரளம் - நீண்ட இலைகளையுடைய தேவதாரு வகையுட்பட்டதொரு பெருமரம்.
 

     கோதை அரசர் - சேரமரபின் அரசர்கள்.
 

     மகோதை - தலைநகரின் பெயர்; பெயரும் - முன்னர்க்கூறிய கொடுங்கோளூர்
என்ற பெயரேயன்றி இதுவும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை
“கடலங்கரைமேன் மகோதை” (தேவா). அரசர் மகோதை - ஆறாம் வேற்றுமைத்
தொகை.
 
     சோலை வள நகர்தான் - இவ்வழகிய காட்சி இன்றும் சிறப்பாய்க்
கண்டனுபவிக்க வுள்ளது.                                             4
 

3752.

முருகு விரியு மலர்ச்சோலை மூதூ ரதன்கண் முறைமரபின்
அருகி யழியுங் கலிநீக்கி யறங்கொள் சைவத் திறந்தழைப்பத்
திருகு சினவெங் களியானைச் சேரர் குலமு முலகுஞ்செய்
பெருகு தவத்தா லரனருளாற் பிறந்தார் பெருமாக் கோதையார்.         5
 
     (இ-ள்) முருகு....அதன்கண் - மணம் வீசும் மலர்களையுடைய சோலைகள்
சூழ்ந்த பழையஅந்நகரத்தில்; முறைமரபின்....திறம்தழைப்ப - சிறுகி அழிவு செய்யும்
கலியினை, விதிமுறை மரபு வழிவரும் ஒழுக்கத்தினாலே நீக்கி அறத்தினை நாட்டும்
சைவத்திறம் தழைத்தோங்கும்படி; திருகு...தவத்தால் - மாறுபட்ட கோபமிகுந்த
மதமுடைய யானைப் படையினையுடைய சேரர் குலமும் உலகமும் செய்த
பெருந்தவத்தினாலே; அரனருளால்...பெருமாக் கோதையார் - சிவனருளாலே பெருமாக்
கோதையார் என்பவர் அவதரித்தனர்.
 
     (வி-ரை) அருகி அழியும் கலி - அருகச் செய்து அழிவிக்கும் கலி என்க;
அழியும் - பிறவினைப் பொருளில் வந்தது; கலி - தீநெறியின் விளைவு -
“கலியைவாராமே செற்றார்” (தேவா). முருகு - மணம்; “முருகலர் தாமரை”.
 
     முறைமரபின் - நீக்கி - என்க; முறை மரபு - வேத நூன்முறை ஒழுக்கம்;
மரபின் - மரபினால்.                                       
 
     அறங்கொள் சைவத்திறம் - அறம் வளரப் பாவம்(கலி) தேயும்; ஆதலின்
அவ்வறத்தினை மேற்கொண்டு பெருக்கும் சைவத்திறம்; ஈண்டுக்குறித்த அறம்
சிவநெறியாகிய அறம்.
 
     யானைச் சேரர்குலம் - யானை - யானைப் படை; “வேழ முடைத்து
மலைநாடு” என்றபடி யானைகள் மிகுந்த மலைநாட்டினை ஆளும் சேரர் குலம்
என்றலுமாம்;