பக்கம் எண் :

1002திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1100. தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந்

தாமுண்ணும்

சோறுடையார்சொற் றேறன்மின்வெண்ணூல்

சேர்மார்பன்

ஏறுடையன்பர னென்பணிவானீள்

சடைமேலோர்

ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார்

கோயிலே. 10

__________________________________________________

காணுதற்கரிய அழலுருவாய் நின்ற பெருமான் தன் கருணை நிறைந்த கமலக் கண்களோடு வீற்றிருக்கும் தலமாகிய கண்ணார் கோயிலை அடைந்து அங்குத் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் ஏத்திடுவோர் வானுலகில் இனிது உறைபவராவர்.

கு-ரை: அயனும் மாலும் கண்ணால் நோக்க முடியாதவண்ணம் தீயுருவான சிவன் திகழும் கண்ணார்கோயிலை வணங்குவார் அமரர் உலகத்து இருப்பார் என்கின்றது.

அங்கு அம் மலக்கண் நோக்கரும் வண்ணத்து - அவ்விடத்து அழகிய ஊனக் கண்ணால் நோக்க முடியாதவண்ணம். தங்கு அமலக் கண்ணார் கோயில் அங்கு அமலத்தோடு ஏத்திட - அவ்விடத்து மலரகிதராய்த் துதிக்க.

10. பொ-ரை: குலைகளை ஈனும் பனை மரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை உடையாக உடுத்தித் திரியும் சமணரும், தாம் உண்ணும் சோற்றையே பெரிதெனக் கருதும் புத்தரும் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர். வெண்மையான பூநூல் அணிந்த மார்பினனும், ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், மேலானவனும், என்பு மாலை அணிபவனும், நீண்ட சடைமுடி மேல் கங்கையை அணிந்துள்ளவனுமாகிய தலைமைத் தண்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் தலம் கண்ணார் கோயிலாகும். அதனைச் சென்று தொழுமின்.

கு-ரை: பனந்தடுக்கை உடுத்திய புத்தரும் சமணரும் சொல்லுகின்ற சொற்களைத் தெளியாதீர்கள்; சிவன் சேர்வது கண்ணார் கோயிலே என்கின்றது. தாறு இடு பெண்ணை - குலை தள்ளும் பெண்பனை. தட்டு - தடுக்கு.