பக்கம் எண் :

106தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


சந்நிதியிலேயே இருக்கிறது. கிழக்குப்பார்த்த சந்நிதி. அம்மன் சந்நிதிக்கு எதிரில் விஷந்தீர்த்த பிள்ளையார்கோயில் இருக்கிறது.

இடம்:

நன்னிலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே ஏழு கி.மீ. தூரமுள்ள திருப்புகலூரையடைந்து, அங்கிருந்து மட்சாலை வழியாகக் கிழக்கே ஐந்து கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

கல்வெட்டு:

அறியக்கூடவில்லை.

7. திருச்செங்காட்டங்குடி

தலம்:

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம், நாகைமாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்றகாலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் தாபித்து வழிபட்டார். அதனால் ‘கணபதீச்சரம்’ எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவதாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து,

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பில்
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றிற் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா!

மீண்டும்செங் காட்டில் ஓர்சார் மேவிமெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
பூண்டபேர் அன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
காண்டகும் அனைய தானம் கணபதீச் சரம தென்பர்.

என்ற செய்யுட்களான் அறியலாம்.