பக்கம் எண் :

248

கல்வெட்டு:

     சோழர் கல்வெட்டுக்கள் இரண்டு (22-234/27) படியெடுக்கப்பட்டன.
இராஜராஜன் பதினைந்தாம் ஆண்டு வானவ நாயக்கன் பெருந்திருக் குடிகள்
வரி கொடுக்க முடியாது வெளி யேறவே, மீண்டும் அவர்களை அங்கே
குடிவைத்தமையைத் தெரிவிக்கிறது.

     இராஜராஜன் பதினாறாம் ஆண்டுக் கல்வெட்டு நந்தவனம்
வைப்பதற்காகக் கொடுத்த நிலத்தின் வரியைத் தள்ளுபடி செய்ததைக்
கூறுகிறது.

                    78. திருமீயச்சூர்

     இது மயிலாடுதுறை பேரளம் தொடர்வண்டிப் பாதையில், பேரளம்
தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 2.5. கி. மீ. தூரத்தில் இருக்கின்றது.
மயிலாடுதுறையிலிருந்து பேரளம் செல்லப் பல பேருந்துகள் உள்ளன. இது
காவிரித் தென்கரையிலுள்ள ஐம்பத்து மூன்றாவது தலம்.

     இறைவர் திருப்பெயர் முயற்சிநாதர். இறைவி திருப்பெயர் சுந்தரநாயகி.

     தலவிருட்சம் வில்வம்

     தீர்த்தம் சூரியபுட்கரணி.

     சூரியன் வழிபட்டுப் பேறு எய்திய தலம்.

     இதற்கு ஞான சம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

     இத் திருமீயச்சூர் கோயில் மூலவிமானம் கஜப்பிரஷ்ட விமானமாகும்.

     இக் கோயிலிலே மீயச்சூர் இளங்கோயில் என்னும் வேறு கோயில்
ஒன்று வடக்குப் பிரகாரத்தில் இருக்கிறது. இங்குள்ள இறைவர் சகல
புவனேச்சுவரர். இறைவியார் மின்னுமேகலாம்பாள். இது காளியால்
பூசிக்கப்பட்டது. இதற்குத் திருநாவுக்கரசர் பாடிய பதிகம் ஒன்று இருக்கிறது.