பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)94. திருவெங்குரு1129

94. திருவெங்குரு

பதிக வரலாறு:

     சீகாழிக்குரியது. பெரிய புராணத்துள் கிளந்தோதப் படாதது.

திருமுக்கால்
பண்: சாதாரி

ப.தொ.எண்: 352 பதிக எண்: 94

 திருச்சிற்றம்பலம்

3810. விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
       சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
     எண்ணவல் லாரிட ரிலரே.              1


    1. பொ-ரை: தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு
என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், சுண்ணம் போன்ற
வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே! சுண்ணம்
போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம்
தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள்
ஆவர்.

     கு-ரை: தொழுது எழும் - தொழாநின்று துயில் எழும், சுண்ண வெண்
பொடி - சுண்ணம் போன்றதாகிய வெள்ளிய திருநீறு. வெங்குரு மேவிய
பொடியணிவீரேயென்க. “நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும்
எழிலுடைமையான், அக்கோலம் தொழுது எழுவார் உள்ளத்து நீங்காது
நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறு ஆம்” என்னும் பேராசிரியர் உரை
இங்குக் கருதத்தக்கது. தொழுகழல் - தொழத்தகும் திருவடி, எண்ணுதல் -
தியானித்தல், ஆறுகோடி மாயாசத்திகள் வேறு வேறு தம் மாயைகள்
தொடங்கித் தடுத்தலின் எண்ணுதலும் அரிதென்பர் எண்ணவல்லார், உம -
உம்முடைய (கழல்கள்).