பக்கம் எண் :

1164திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

100. திருத்தோணிபுரம்

பதிகவரலாறு:

     சீகாழிக்குரியது. விதந்து ஓதப்பட்டது இத் திருப்பதிகம்.

பண்: பழம்பஞ்சுரம

ப.தொ.எண்:358 பதிக எண்:100

திருச்சிற்றம்பலம்

3872. கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற்
       காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கை யோர்பான் மகிழ்ந்த
     வற்புதஞ் செப்பரிதால்
பெரும்பக லேவந்தென் பெண்மை கொண்டு
     பேர்த்தவர் சேர்ந்தவிடஞ்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத்
     தோணிபுரந்தானே.                    1


     1. பொ-ரை: சிவபெருமான் கரும்பினை வில்லாகக் கொண்ட
மன்மதனைக் கோபித்து நெருப்புக் கண்ணால் எரித்து, பின்னர் அவனது
அன்பிற்குரிய மனையாளாகிய இரதி வேண்ட அவள் கண்ணுக்கு மட்டும்
உருவம் தோன்றுமாறு செய்து, கோங்கின் அரும்பு போன்ற
கொங்கைகளையுடைய உமாதேவியை ஒரு பகுதியாகக் கொண்டு மகிழ்ந்த
அற்புதம் செப்புதற்கரியதாகும். நண்பகலிலே வந்து எனது பெண்மை
நலத்தைக் கவர்ந்து கொண்டு திரும்பவும் அவர் சென்று சேர்ந்த இடம்
வண்டுகள் விரும்பி உறைகின்ற சோலைகள் சூழப்பெற்ற நன்னெறி மிக்க
திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: கரும்பு அமர்வில்லி - மன்மதன். காய்ந்து - கோபித்து,
உருவத்தை அழித்து. காதற்காரிகை மாட்டு - அவனது காதலுக்குரிய
மனைவியாகிய இரதி தேவிக்கு. அருளி - (அவள் கண்ணுக்கு மட்டும்
உருவம் தோன்றுமாறு) அருள் புரிந்து. அரும்பு - தாமரையரும்பு. கோங்கு
அரும்புமாம். அமர் - போன்ற உவமவாசகம். கொங்கை - சினையாகு
பெயராய் அம்பிகையை யுணர்த்திற்று. இங்க அற்புதமாவது - மன்மதனால்
தாம் அம்பிகையை மணந்ததாகப் பிறர் கருதுமாறு செய்வித்தமையன்றி
“முதலுருப்பாதி மாதராவது முணரார்” “ஒன்றொடொன்றொவ்வாவேடம்
ஒருவனே தரித்துக்