பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)113. திருக்கழுமலம்1261

113. திருக்கழுமலம்

பதிக வரலாறு:

     தென்னாட்டமண்மாசு அறுத்து, திருநீறே போற்றுவித்த
திருஞானசம்பந்தர், மீண்டடைந்து, திருப்புகலியில் திருத்தோணிநாதர்
கோயிலைத் தொழுது, உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழியப்
பணிந்து ஏத்திப் பாடியது இத் திருப்பதிகம்.

திருவியமகம்
பண்: பழம்பஞ்சுரம்

ப.தொ.எண்: 371 பதிகஎண்: 113

 திருச்சிற்றம்பலம்

4012. உற்றுமை சேர்வது மெய்யினையே
       உணர்வது நின்னருண் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே
     கனல்விழி காய்வது காமனையே
அற்ற மறைப்பது முன்பணியே
      அமரர்கள் செய்வது முன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே
     பிரம புரத்தை யுகந்தனையே.           1


     1. பொ-ரை: இறைவரே! உமாதேவியார் பிரியாது பொருந்தி இருப்பது
உம் திருமேனியையே. சிவஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது
பேரருளையே. கற்றுணர்ந்த துறவிகள் வெறுப்பது மனைவி முதலிய
குடும்பத்தையே. நெற்றிக்கண் எரித்தது மன்மதனையே. உமது திருமேனியை
மறைப்பது பாம்பே. தேவர்கள் செய்வது உமது பணிவிடையே. நீர்
பெற்றெடுத்து விரும்பி அணைத்தது முருகப் பெருமானையே. நீர்
திருப்பிரமபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றீர்.

     கு-ரை: பிரமபுரத்தை உகந்தனையே - திருப்பிரமபுரத்தை
விரும்பியருளிய பெருமானே! உமை - உமாதேவியார். உற்று - பிரியாது
பொருந்தி. மெய்யினை - உமது திருவுடம்பை. உணர்வதும் - சிவஞானிகள்
அறிவதும். நின் அருள் மெய்யினையே - உமது உண்மையான அருளையே.
கற்றவர் - ஞானநூலைக் கற்ற துறவிகள்.