பக்கம் எண் :

1272திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4023. பருமதில் மதுரைமன் னவையெதிரே
       பதிகம தெழுதிலை யவையெதிரே.
வருநதி யிடைமிசை வருகரனே
     வசையொடு மலர்கெட வருகரனே
கருதலி லிசைமுர றருமருளே
     கழுமல மமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே
     வல்லவர் தம்மிடம் திடமொழியே.       12

திருச்சிற்றம்பலம்


அதனைக் கூறினர். நண்ணி அடிமுடி எய்தலரே -
சேர்ந்து அடி முடியையும் அடையாதவர் ஆயினர். நளிர்மலி சோலையில்
எய்து அலர் - குளிர்ச்சிமிக்க சோலையில் உள்ள மலர்கள். பண் இயல் -
சிவபூசை பண்ணுதற்குப் பொருந்திய. கொச்சை - கொச்சைவயம் என்னும்
தலத்திலுள்ள. பசுபதியே - ஆன்மவர்க்கங்களுக்குத் தலைவராய், அதனால்
பசுபதி என்னும் பெயர் படைத்தவர். பசு - ஆனேற்றை. மிக - என்றும்.
ஊர்வர் - ஏறுவார்; அதனால் பசு பதியே - பசுபதி என்னும் பெயர்
படைத்தவரும் ஆவர். பசுபதி - என்ற சொல் பசுக்களுக்கு
(ஆன்மாக்களுக்கு)ப் பதியாம் தன்மையாலும், பசு ஏறுதலாலும், எய்திய
பெயர் என்பது இங்குத் தெளிவிக்கப்பட்டது.

     12. பொ-ரை: பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது
அவைமுன்னர்த், திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வைகை நதியின் மீது
செலுத்த அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர்
சிவபெருமான். அவர் சைவர்கட்கு வந்த பழியும், பழிதூற்றலும் கெடுமாறு
சமணர்களை அழித்தவர். நினைக்கவும் முடியாதபடி சைவர்களின் புகழ்
உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த வியப்பான செயல்.
திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனின் அருளே. அவ்வருளைப்
பெற்ற முத்தமிழ் விரகரது பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல்
நிச்சயம்.

     கு-ரை: பருமதில் மதுரை மன் அவை எதிரே - பருத்த மதில்களை
உடைய மதுரை அரசன் சபையின் முன். பதிகம் அது எழுது இலை அவை
- பனை ஏடும் அதில் எழுதிய பாடலும் ஆகியவைகள். (அவை - என்று
பன்மையால் கூறினமையால் இங்ஙனம் கூறப்பட்டது.) வருநதி இடை -
வரும் வைகையாற்றில், மிசை - மேலே. எதிரே வரு - எதிரேவரச் செய்த.
கரன் - செய்கையை உடையவன்.