|
சென்ற திருவீதியை
உடையது. இச்செய்தியை அடியேற்கு எளிவந்த
தூதனை என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். காஞ்சிபுரத்தில்
ஒருகண் பெற்ற அவர் மீளா அடிமை என்று தொடங்கும்
திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்
தான். நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார்,
கழற்சிங்கநாயனார், விறன்மிண்ட நாயனார் இவர்கள் முத்திபெற்றதும்
இப்பதியிலேதான். இத்தலம் சோழமன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும்
தலங்கள் ஐந்தனுள் ஒன்றாகும். ஒருகுலத்துக்கு ஒருமகன் உள்ளான்
என்பதையும் ஓராது ஓரான்கன்றுக்காகத் தன் மகனது உயிரைப் போக்கிய
மனுநீதிச் சோழன் ஆண்டதும் இப்பதியேதான். திருவாரூர்ப் பிறந்தார்கள்
எல்லார்க்கும் அடியேன் என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருவாய்மலர்ந்தருளியிருப்பதால் இப்பதியின் பெருமையை அளவிடுவார்
யார்? இதை விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும். பெரியபுராணத்திலுள்ள
திருவாரூர்ச் சிறப்பு என்னும் பகுதி படித்து இன்புறுதற்குரியதாகும்.
திருவாதிரைத்
திருவிழா: பழங்காலத்தில் இவ்விழா பெருஞ்சிறப்புடன்
கொண்டாடப்பட்டு வந்தது. அவ்விழாவை அப்பர் சுவாமிகள் கண்டு
களித்து, அதன் சிறப்பை முத்து விதானம என்று தொடங்கும் ஒரு தனித்
திருப்பதிகத்தினால் ஞானசம்பந்தப் பெருந்தகையார்க்குக்
கூறியருளியிருக்கிறார்கள்.
பங்குனி
உத்திரத் திருவிழா: இது மாசிமாதம் அத்த நட்சத்திரத்தில்
கொடியேறி, பங்குனி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தம் நடைபெறும்,
திருவிழாவாகும். இவ்விழா நினைவிற்கு வரவே ஒற்றியூரிலிருந்த சுந்தரமூர்த்தி
நாயனார் சூளுறவையும் மறந்து, திருவாரூர்க்குப் புறப்பட்டார் என்று
பெரியபுராணம் செப்புகின்றது. அதனால் இவ்விருவிழாக்களும் பழங்கால
முதல் நடந்துவரும் சிறப்புடையன வாதலை நன்கறியலாம்.
பூங்கோயிலில்
எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருப்பெயர்கள்
வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், திருமூலட்டானநாதர். இறைவியாரின்
திருப்பெயர் அல்லியம்பூங்கோதை அம்மை. யோக நிலையில்
தனிக்கோயிலில் கமலாம்பிகையாக எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்தில்
எழுந்தருளியிருக்கும் தியாகராசர் முதலில் திருமாலால்
திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால்
|