உ
குருபாதம்
பதிப்புரை
பிறவியெனும்
பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தோற்றோணி கண்டீர்-நிறைஉலகிற்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
-நம்பியாண்டார்நம்பி
|
வேதநெறி
தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும்
திருவவதாரம் செய்தருளியவர் திருஞானசம்பந்தர். அவர் அருளிய தேவாரத்
திருப்பதிகங்கள் பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாகப்
போற்றப் பெறுகின்றன.
திசையனைத்தின்
பெருமை எலாம் தென்திசையே வென்றேறவும்,
அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லவும்
விளங்கும் அவர் அருளிய திருப்பதிகங்கள் தமிழ் மக்களின் மொழி, சமயம்,
தத்துவம், இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை விளக்கி நிற்கும்
ஞானப் பெருங்கடல் எனலாம்.
திருஞானசம்பந்தர்
தமிழோடு இணைந்து நின்று திருப்பதிகங்கள்
அருளியிருப்பதை அவர்தம் தேவாரத் திருப்பதிகங்களில் காணலாம்.
ஆளுடைய நம்பிகள் ஞானசம்பந்தரை நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
எனக் குறித்தருளுவார். ஞானசம்பந்தரே தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன்,
தமிழ் விரகன், தமிழாகரன்; முத்தமிழ்விரகன் முதலிய பல பெயர்களால்
குறிப்பிட்டுள்ளதை அவர்தம் திருப்பதிகங்களில் காணலாம். ஞானசம்பந்தரின்
தேவாரத் திருப்பதிகங்களை நல்ல சங்கத்து ஒன்றும் புலவர்கள்
யாப்புக்குரியன என்று அருளிச்செய்கின்றார் நம்பியாண்டார் நம்பிகள்.
ஞானசம்பந்தர் பல்வேறு சந்த யாப்புக்களில் திருப்பதிகங்கள்
அருளியுள்ளார்.
அந்தாதித்
தொடை, முடுகியல் சந்தமான திருவிராகம், ஈரடி, ஈரடி
மேல்வைப்பு, ஏகபாதம், எழுகூற்றிருக்கை, கூடல் சதுக்கம், கோமூத்திரி,
சக்கரமாற்று, மாலைமாற்று, மொழிமாற்று, இடைமடக்காக வரும் திருமுக்கால்,
யமகம், நாலடி மேல்வைப்பு, வழிமொழித் திருவிராகம், குற்றெழுத்தே வரும்
பாடல், நெட்டெழுத்தே வரும்
|