பக்கம் எண் :

42முதல் பதிப்பின் மதிப்புரை 

                            உ

                         குருபாதம்

                  முதல் பதிப்பின் பாராட்டுரை


            திருவண்ணாமலையாதீனம் குன்றக்குடி மகாசந்நிதானம்

               ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல

                  தேசிகபரமாசாரிய சுவாமிகள்

                (தவத்திரு குன்றக்குடி அடிகளார்)

                        அவர்கள்


     திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருமுறைகளுள்ளும்
மூன்றாந்திருமுறை உச்சிமேல் கொள்ளத்தக்கது. “ஞாலம் நின்புகழே
மிகவேண்டும்” என்ற விண்ணப்பத் திருப்பதிகம் இத் திருமுறையிலேயே
உள்ளது. ஆம்; தமிழகத்தின் தனி நெறியான சிவநெறியே ஞாலநெறி,
பலருக்கும் பொதுநெறி. இம்மையோடன்றி மறுமையும் எழுமையும்
இன்பந்தரும் திருநெறி. இந்நெறிநின்று உலகுயிர்கள் வாழ்தல் வேண்டும்.
யாண்டும் எங்கும் எல்லோரும் சைவமாம் சமயம் சார்ந்து நல்வாழ்வு
பெறுதல் வேண்டும் என்று விண்ணப்பிக்கும் திருப்பதிகம் சாலவும்
முதன்மையுடைத்து.

     பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார் பெருமான்
வியந்து வாழ்த்தும் திருப்பாசுரத் திருப்பதிகமும் இத்திருமுறையிலேயே
உள்ளது.

     சைவத் திருநெறியின் பெருமையைக் காப்பாற்றிய பதிகம்
திருப்பாசுரம், தமிழகத்தின் தண்ணீரும் சைவத் தமிழ் நுகர்ந்து அநுபவிக்கும்
தகுதி உடையனவென்பது.

     இருள் நீக்கி இன்பப் பெருவாழ்வுதரும் திருவைந்தெழுத்துத்
திருப்பதிகம் இத் திருமுறையின் கண்ணேயே உளது. காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி ஓதி உயர்வடைதற்குப் பயன்பெறும் முறையில் இத்திருமுறை
ஆன்மாக்களை நோக்கி வருகிறது.