பக்கம் எண் :

530திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

19. திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்

பதிக வரலாறு:

      இருக்கு மொழிப்பிள்ளையாரும் உருக்கும் மொழி வேந்தரும்
செய்தவக் குழாத்தொடும் திருவம்பர்ப் பெருந் திருக்கோயிலை
அணைந்தனர். கோயிலை வலங்கொண்டனர். திரு முன்பு பணிந்து ஏத்தி
மலர் தூவிப் பரவி உருகும் அன்பொடும் தாழ்ந்து பாடியருளிய
வண்டமிழ்மாலை இத்திருப்பதிகம்.

பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்: 277   பதிக பதிக எண்:19

திருச்சிற்றம்பலம்

2998. எரிதர அனல்கையில் ஏந்தி யெல்லியில்
  நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.     1


     1. பொ-ரை: இறைவர் எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்தி
நள்ளிருளில், நரிகள் திரிகின்ற மயானத்தில் திருநடனம் புரிகின்றார்.
அப்பெருமானார் அரிசில் ஆறு பாய்வதால் நீர்வளமிக்க அம்பர்
மாநகரில் பெருமையிற் சிறந்த, சிவந்த கண்களையுடைய கோச்செங்கட்
சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: நெருப்பு, கையில் எரிய ஏந்திக் கொண்டு இரவில் மயானத்தில்
நட்டம் (நடனம்) ஆடுவாய் என்பது முதலிரண்டு அடியின் கருத்து. அரிசில்
அம்பொரு புனல் அம்பர் - அரிசில் ஆற்றின் நீர்வளம் பொருந்திய
திருஅம்பர். குரிசில் - சிறந்தோன்.

     செங்கண்ணவன் - கோச்செங்கட்சோழ நாயனார். நட்டம்
ஆடுபவராகிய சிவபெருமான் அம்பர்மா நகர்க்கோயில் சேர்ந்திருப்பர்
என்பது முடிவு. மகாப்பிரளய காலத்தில் எங்கும் ஒரே இருள்மயமாய்
இருத்தலின், எல்லியில் என்றார். நரி திரிகான் - சுடுகாடு. “கோயில்
சுடுகாடு” என்பது காண்க. (திருவாசகம்)