பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)36. திருக்காளத்தி641

3186. முத்துமா மணிகளு முழுமலர்த் திரள்களும்
  எத்துமா முகலியின் கரையினி லெழில்பெறக்
கத்திட வரக்கனைக் கால்விர லூன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.     8

3187. மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
  நண்ணுமா முகலியின் கரையினி னன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி யாங்கணைந் துய்ம்மினே.  9

3188. வீங்கிய வுடலினர் விரிதரு துவருடைப்
  பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்


     8. பொ-ரை: இராவணன் கயிலைமலையின் கீழ் நெரியும்படி தன்
காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான், முத்துக்களும், மணிகளும்,
மலர்க்கொத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி
ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய திருக்காளத்தி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அத்திருத்தலத்தை அடைந்து
அப்பெருமானை வணங்குதல் நம் கடமையாகும்.

     கு-ரை: இராவணன் என்ற பெயர்க்காரணம் புலப்பட, கத்திட என்றார்.

     9. பொ-ரை: வேங்கை, மருது ஆகிய மரங்கள் வேருடன்
வீழ்த்தப்பட்டுச் சேற்று மண்ணுடன் கலந்து தள்ளப்பட்டு வரும்
பொன்முகலியாற்றின் கரையில், அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவனும், எவ்வுயிர்கட்கும் நன்மையே
செய்கின்றவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
அத்திருத்தலத்தை அடைந்து வணங்கிப் போற்றி உய்தி பெறுங்கள்.

     கு-ரை: மண்ணும் - நிலத்தையும், (மா) வேங்கை மரங்களையும்.
மருதுகள் - மருதமரம் முதலியவற்றையும். பீழ்ந்து - பிளந்து. உந்தி -
அடித்துக்கொண்டு.

     10. பொ-ரை: பருத்த உடலுடைய சமணர்களும், புத்தர்களும்
இறையுண்மையை உணராது கூறும் சொற்களைக் கை விடுக.