பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)44. திருக்கழிப்பாலை்695

45. திருவாரூர்

பதிக வரலாறு:

     திருவாரூர் அரசளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்
பரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது,
மெய்த்தொண்டர் குழாத்தின் எதிர்வணங்கி, முத்தமிழ் விரகர் இத்தமிழ்
பாடியருளினார்.

பண்: கௌசிகம்

ப.தொ.எண்:303   பதிக எண்: 45

திருச்சிற்றம்பலம்

3277. அந்த மாயுல காதியு மாயினான்
  வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்றிரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.   1

3278. கருத்த னேகரு தார்புர மூன்றெய்த
  ஒருத்த னேயுமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு வாரூரெந் தீவண்ண
அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே.     2


     1. பொ-ரை: சிவபெருமான் உலகத்தின் ஒடுக்கத்திற்கும்,
தோற்றத்திற்கும் நிமித்த காரணன். திருவெண்ணீறு பூசிய வேத நாயகன்.
என் சிந்தையில் புகுந்து விளங்குபவன். திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம்
தந்தையான அவன் என்னை ஏற்று அருள் புரிவானோ!

     கு-ரை: உலகின் முடிவும் முதலும் ஆகியவன் என்பது உலகின்
தோற்ற ஒடுக்கங்கட்கும் நிமித்தகாரணனாய் உள்ளவன். எம் எந்தை -
எங்கள் அனைவருக்கும் உரிய என் தந்தை. எம் என்றது பலதிறத்தினராகிய
அடியவரை. அது "உருத்திர பல் கணத்தார்""பல்லடியார்" என்பனவற்றால்
அறிக.

     2. பொ-ரை: இறைவர் என் கருத்திலிருப்பவர். தம்மைக் கருதிப்
போற்றாத பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அக்கினிக்கணை
தொடுத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். ஒப்பற்றவர்,