பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)44. திருக்கழிப்பாலை்697

3281. குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
  விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு வாரூரான்
வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.   5

3282. வார்கொண் மென்முலை யாளொரு பாகமா
  ஊர்க ளாரிடு பிச்சைகொ ளுத்தமன்
சீர்கொண் மாடங்கள் சூழ்திரு வாரூரான்
ஆர்க ணாவெனை யஞ்சலெ னாததே.         6


     கு-ரை: பல் இல் ஓடு - பல்இல்லாத மண்டையோடு.

     5. பொ-ரை: குருந்த மரத்தில் ஏறிப்படரும் மாதவியும், விரிந்து
மலர்ந்த நறுமணம் கமழும் தேனுடைய கொன்றை மரங்களும் திகழ,
மாடமாளிகைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவர் நான்
வருந்தும்போது, என்னை வருந்தாதே என்றுரைத்து அருள் புரிவாரோ!

     கு-ரை: வாடல் - வாடாதே, வாடற்க, 'மகனெனல்' என்ற திருக்குறளிற்
போல, அல்ஈறு, எதிர்மறை வியங்கோள் குறித்தது. இப்பாசுரத்தின்
முதலீரடிகளால் மாடங்களின் அருகே பூந்தோட்டங்கள் இருந்தமை
புலப்படுகிறது.

     6. பொ-ரை: கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவியைத்
தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, ஊரிலுள்ளவர்கள் இடுகின்ற
பிச்சையை ஏற்கும் உத்தமனாய், செல்வ வளமிக்க அழகிய மாடங்கள் சூழ்ந்த
திருவாரூரில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் நான் வேறு யாரைச் சரணாகப்
புகுந்துள்ளேன் என்று கருதி அவன் என்னை அஞ்சாதே என்று
கூறாமலிருக்கிறான்?

     கு-ரை: ஊர்களார் - ஊர்களிலுள்ளவர். சீர் - செல்வ வளம்
(இலட்சுமி கரம்). ஆர்கண் ஆக - யாரை யான் பற்றுக்கோடாக உடையேன்
எனக்கருதி, கண் - (சரண்புகும்) இடம்.

     ஊர்களார் என்பதை ஊரார்கள் என்று வழங்குவதோடு
ஒத்திட்டுணர்க.