பக்கம் எண் :

698திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3283. வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
  துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு வாரூரான்
இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ.  7

3284. இலங்கை மன்ன னிருபது தோளிறக்
  கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ்திரு வாரூரான்
அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ.      8

3285. நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
  படிய வன்பனி மாமதிச் சென்னியான்
செடிக ணீக்கிய தென்றிரு வாரூரெம்
அடிக டானெனை யஞ்சலெ னுங்கொலோ.         9


     7. பொ-ரை: வளையலணிந்த கைகளையுடைய உமாதேவியை ஒரு
பாகமாகக் கொண்ட இறைவன், தன்னை எதிர்த்து வந்த யானையானது
கலங்குமாறு அடர்த்து அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்,
குளிர்ந்த புனல் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன், இளைத்து
வருந்தும் காலத்தில் என்னை ஏற்று அருள் புரிவானோ!

     கு-ரை: யானைதுயர்படப் போர்த்தவன் - யானை துயர்பட உரித்து
என ஒரு சொல் வருவித்துரைக்க. திளைக்கும் - நீராடுதற்குரிய.

     8. பொ-ரை: இலங்கை வேந்தனான இராவணனுடைய இருபது
தோள்களும் நொறுங்கிக் கலங்கத் தன் காற்பெருவிரலை ஊன்றியவர்
இறைவர். வலிமையுடைய பெரிய மதில்கள் சூழ்ந்த திருவாரூரில்
வீற்றிருந்தருளும் அப்பெருமான் எனக்குப் பெருமை சேர்க்கும் மாலை
தந்து அருளி, நான் வருந்தும் காலத்தில் அஞ்சாதே என்று அபயம்
அளித்துக் காப்பாரோ!

     கு-ரை: தோளிறவும். அவன் கலங்கவும். கடை - அவனது
(வலிமையின்) முடிவை. அலங்கல் - மாலை.

     9. பொ-ரை: நீண்டு உயர்ந்த திருமாலும், பிரமனும் காணமுடியாத
தன்மையராய்க்குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில்