பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)51. திருஆலவாய்731

3344. தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
  அஞ்ச லென்றரு ளாலவா யண்ணலே
வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
பஞ்ச வன்தென்னன் பாண்டியற்காகவே.     6

3345. செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய்
  அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
கங்கு லாரமண் கைய ரிடுங்கனல்
பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே.     7

3346. தூர்த்தன் வீரந் தொலைத்தரு ளாலவாய்
  ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை


     6. பொ-ரை: திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! அபயம்
என்று உம்முடைய திருவடிகளைச் சரணம் அடைந்த அடியேனையும்
அஞ்சேல் என்று கூறி அருள்புரிவீராக. வஞ்சகம் செய்யும் சமணர்கள்
இம்மடத்திற்கு வைத்த இந்த நெருப்பு, பஞ்சவன், தென்னன் முதலிய
பெயர்களையுடைய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.

     கு-ரை: தஞ்சம் - (தண் + து + அம்) அபயம். அஞ்சல் - அஞ்சாதே.
வஞ்சம் - (வல் + து + அம்) கொடுமை. பஞ்சவன்; தென்னவன்;
பாண்டியனைக் குறித்த பெயர்கள்.

     7. பொ-ரை: சிவந்த கண்களையுடைய வெண்ணிற இடபத்தை
வாகனமாக உடையவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அழகிய
கண்களையுடைய சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று
அருள்செய்வீராக! இருள்மனம் கொண்ட சமணர்கள் இம்மடத்திற்கு
இட்ட நெருப்பானது, உயிருக்குத் தீங்கு நேராதபடி பாண்டிய மன்னனைச்
சென்று பற்றுவதாக.

     கு-ரை: அங்கணன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர். “அங்கணன்
கையிலை காக்கும்” (காஞ்சிப் புராணம்.) கங்குலார் - இருள் போன்றவர்.
மீளவும் சைவம் திரும்புகின்றமையின் “பங்கம் இல் தென்னன்” என்றார்.
(தி.12 பெரியபுராணம்) பங்கம் - குற்றம்.

     8. பொ-ரை: பிறன் மாதரை விரும்பிய தூர்த்தனாகிய இராவணனின்
வீரத்தை அழித்துப்பின் அருள்செய்த திருஆலவாயில்